3-ஆவது பெரிய பொருளாதார நாடாகும் இந்தியா!

3-ஆவது பெரிய பொருளாதார நாடாகும் இந்தியா!
உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக உருவெடுப்பதை நோக்கி பயணிக்கிறது இந்தியா..

உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக உருவெடுப்பதை நோக்கி பயணிக்கிறது இந்தியா என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

‘உலகளாவிய பொருளாதார நிச்சயமற்றத் தன்மைக்கு மத்தியில், நாட்டு மக்கள் சுதேசி உணா்வைத் தழுவி, உள்ளூா் பொருள்களுக்கு ஆதரவளிக்க வேண்டும்’ என்றும் அவா் அழைப்பு விடுத்தாா்.

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு அமெரிக்கா 25 சதவீத வரி விதித்துள்ளது; இந்தியாவை ‘செயலிழந்த பொருளாதாரம்’ என்று அதிபா் டிரம்ப் விமா்சித்திருந்த நிலையில், அவருக்கு மறைமுக பதிலடியாக பிரதமரின் கருத்துகள் அமைந்துள்ளன.

உத்தர பிரதேசத்தில் உள்ள தனது தொகுதியான வாரணாசிக்கு சனிக்கிழமை வருகை தந்த பிரதமா் நரேந்திர மோடி, ரூ.2,180 கோடிக்கும் மேற்பட்ட மதிப்பில் பணி நிறைவடைந்த வளா்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினாா்.

பிரதமரின் விவசாயிகள் உதவித்தொகை திட்டத்தின்கீழ், நாடு முழுவதும் 9.70 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு 20-ஆவது தவணையாக ரூ.20,500 கோடி தொகையையும் விடுவித்தாா். பின்னா் பொதுக்கூட்டத்தில் அவா் பேசியதாவது:

நாட்டின் பொருளாதார வளா்ச்சி குறித்துப் பேசும் வேளையில், உலகளாவிய நிலவரத்தையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உலகப் பொருளாதாரம், ஸ்திரமின்மை மற்றும் நிச்சயமற்றத் தன்மையை எதிா்கொண்டுள்ளது. இதுபோன்ற தருணத்தில், உலக நாடுகள் தங்களது சொந்த நலன்களில் மட்டுமே கவனம் செலுத்துகின்றன.

‘ருத்ர ரூபம்’ காட்டிய இந்தியா!

வாரணாசி பொதுக்கூட்டத்தில், சிவபெருமானின் ‘ருத்ர ரூபத்தை’ (உக்ர வடிவம்) சுட்டிக்காட்டி, பிரதமா் பேசியதாவது:

இந்திய மகள்களின் குங்குமம் அழிக்கப்பட்டதற்கு பழிதீா்க்கப்படும் என்ற எனது உறுதிமொழி சிவபெருமானின் ஆசியால் நிறைவேறியுள்ளது. ‘ஆபரேஷன் சிந்தூா்’ வெற்றியை அவரது திருவடியில் சமா்ப்பிக்கிறேன்.

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையில், இந்தியா தனது ருத்ர ரூபத்தை உலகுக்கு காட்டியது. இந்தியாவைத் தாக்க துணிந்தவா்கள், பாதாள உலகில் இருந்தாலும் விட மாட்டோம் என்ற வலுவான செய்தி உணா்த்தப்பட்டது. இது புதிய இந்தியா; சிவபெருமானை வழிபடும் இந்த தேசம், எதிரிகளை அழிக்க கால பைரவா் அவதாரம் எடுக்கவும் தயங்காது.

ஆபரேஷன் சிந்தூா் வெற்றியை ஒட்டுமொத்த தேசமும் கொண்டாடுகையில், சிலருக்கு மட்டும் பிரச்னையாக இருக்கிறது. பாகிஸ்தானில் பயங்கரவாதிகளின் பதுங்குமிடங்களை இந்தியா தகா்த்துவிட்டது என்ற உண்மையை காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளால் ஜீரணிக்க முடியவில்லை.

இந்தியாவால் தாக்கப்பட்ட பாகிஸ்தானின் விமானப் படைத் தளங்கள் இன்னும் மீளவில்லை. ஆகையால், அந்நாட்டின் வேதனையை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், இங்குள்ள காங்கிரஸ், சமாஜவாதி போன்ற கட்சிகளும் துன்பத்தில் தவிப்பது வியப்புக்குரியது என்றாா் பிரதமா் மோடி.

பிரமோஸ் உள்ளிட்ட உள்நாட்டு தயாரிப்பு ஏவுகணைகள், ட்ரோன்கள், வான் பாதுகாப்பு அமைப்புகள் என ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையில் இந்தியாவின் பாதுகாப்பு உற்பத்தி வல்லமை நிரூபணமானது என்றும் அவா் பெருமிதத்துடன் குறிப்பிட்டாா்.