ரூபாயில் கோட்டையா கட்டப்போற? கேட்ட கடைக்காரருக்கு ரூ.5,000 போச்சு

ரூபாயில் கோட்டையா கட்டப்போற? கேட்ட கடைக்காரருக்கு ரூ.5,000 போச்சு
மீன் விலையை விட,ஒரு ரூபாய் கூடுதலாக பெற்றதால், இழப்பீடு வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது

கோவை, கவுண்டம்பாளையம், ஹவுசிங் யூனிட்டில் வசிப்பவர் ராஜா. சிறை காவலரான இவர், மேட்டுப்பாளையம் சாலையிலுள்ள, 'பிஷ் புட்டீ' என்றகடையில், 2024 ஆக., 28ல் மீன் வாங்க சென்றார்.

ஒரு கிலோ மீன்,299 ரூபாய் என்று கடைக்காரர் கூறியுள்ளார். கூகுள் பே மூலம் பணம் செலுத்திய போது, கடை விற்பனையாளர், 300 ரூபாய் என்று உள்ளீடு செய்தார்.

இதனால் ராஜாவின் வங்கி கணக்கில், 'கியூஆர் கோடு' மூலமாக, 300 ரூபாய் எடுக்கப்பட்டது. 'எதற்காக 1 ரூபாய் கூடுதலாக எடுத்துள்ளீர்கள்?' என, ராஜா கேட்டதற்கு, '1 ரூபாயில் கோட்டையா கட்டப்போற' என, கடைக்காரர் நக்கல் அடித்துள்ளார்.

கடை உரிமையாளர்பேசியது, மன உளைச்சலை ஏற்படுத்தியதால், அவர் மீது, நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இழப்பீடு கோரி, கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில், ராஜா வழக்கு தாக்கல் செய்தார்

விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல் மற்றும் உறுப்பினர்கள் பிறப்பித்த உத்தரவில், 'மனுதாரரிடம் கூடுதலாக பெற்ற 1 ரூபாயை, எதிர்மனுதாரர் திருப்பி கொடுப்பதோடு,மன உளைச்சலுக்கு இழப்பீடாக, 2,000 ரூபாய், வழக்கு செலவு, 3,000 ரூபாய் வழங்க வேண்டும்' என, உத்தரவிட்டனர்.