நான் முதல்வன் திட்டம்: ரூ.25,000 ஊக்கத்தொகை பெறுவதற்கான விண்ணப்ப அவகாசம் நீட்டிப்பு

சென்னை: நான் முதல்வன் திட்டத்தின் கீழ் UPSC முதன்மைத் தேர்வு ஊக்கத்தொகை பெறுவதற்கான விண்ணப்ப அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜூலை 13 ஆம் தேதி வரை ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டம் மூலம் யுபிஎஸ்சி தேர்விற்கு கட்டணமில்லாமல் உதவித்தொகையுடன் பயிற்சி வழங்கப்படுகிறது. இந்நிலையில், 2026 ஆம் ஆண்டுக்கான தேர்விற்கு தேர்வர்களை தயார்படுத்தும் வகையில், யுபிஎஸ்சி உதவித்தொகைக்கான மதிப்பீட்டிற்கு தேர்விற்கு விண்ணப்பம் தொடங்கி உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் வரும் ஜூலை 13 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
2023-24 பட்ஜெட்டில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், அகில இந்திய குடிமைப் பணித் தேர்வு பயிற்சி மையத்துடன் இணைத்து, மாணவர்களுக்கு சிறந்த பயிற்சி மற்றும் இதர தேவையான வசதிகளும் வழங்கும் வகையில் ஒரு திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்தத் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஆண்டும் 1,000 சிவில் சர்வீசஸ் பயின்று வரும் மாணவர்கள், மதிப்பீட்டுத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். முதல்நிலைத் தேர்வுக்குத் தயாராவதற்கு ஒவ்வொரு மாணவருக்கும் 10 மாதங்களுக்கு மாதம் ரூ.7,500 வழங்கப்படும். இத்திட்டம் கடந்த 2023- ஆம் ஆண்டு முதல் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 2024 மற்றும் 2025 -ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற யு.பி.எஸ்.சி முதல் நிலைத் தேர்வுகளில் முறையே 276 மற்றும் 315 நான் முதல்வன் ஊக்கத் தொகை பயனாளி மாணவர்கள் முதன்மைத் எழுதத் தேர்வு செய்யப்பட்டனர்
இத்திட்டத்தின் படி, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், அதன் கீழ் இயங்கிவரும் நான் முதல்வன் போட்டித் தேர்வுகள் பிரிவின் வாயிலாக யு.பி.எஸ்.சி முதல் நிலைத் தேர்வு-2026-க்கு தயாராகும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதற்கான மதிப்பீட்டுத் தேர்வை 26.07.2025 அன்று நடத்தத் திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் தேர்ந்தெடுக்கப்படும் 1000 தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகையாக மாதம் 7500 ரூபாய் வீதம் 10 மாதங்களுக்கு வழங்கப்படும்.