இந்துசமய அறநிலையத்துறை சார்பில் அம்மன் கோவில்களுக்கு ஆன்மிக பயணம்

இந்துசமய அறநிலையத்துறை சார்பில் அம்மன் கோவில்களுக்கு ஆன்மிக பயணம்
அம்மன் கோவில்களுக்கு பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக ஆன்மிக பயணம் நேற்று தொடங்கியது.;

தஞ்சாவூர்,

இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் அம்மன் கோவில்களுக்கு ஆன்மிக பயணம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதன்படி தஞ்சாவூர் மண்டலம் சார்பாக தஞ்சை பெரியகோவிலில் இருந்து ஆன்மிக பயணம் நேற்று தொடங்கியது. அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் ஜோதிலட்சுமி ஆன்மிக பயணத்தை தொடங்கி வைத்தார். இதில் 60 வயதிற்கு மேற்பட்ட 57 பேர் ஆன்மிக பயணம் சென்றனர்.

இந்த ஆன்மிக பயண குழுவினர் தஞ்சை பெரியகோவில் வராகி அம்மன் சன்னதியில் இருந்து புறப்பட்டு, மேல வீதி பங்காரு காமாட்சி அம்மன் கோவில், புன்னைநல்லூர் மாரியம்மன், திருக்கருக்காவூர் கற்பகரட்சாம்பிகை, பட்டீஸ்வரம் துர்க்கை அம்மன் உள்ளிட்ட கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.

இதே போல் ஆடி மாதம் அனைத்து வெள்ளிக்கிழமையும் இந்த ஆன்மிக பயணம் பெரியகோவிலில் இருந்து புறப்பட்டு செல்லும். இந்த பயணம் மேற்கொள்ள விருப்பம் உள்ளவர்கள், வயதானவர்கள் அழைத்து செல்லப்படுகிறார்கள். ஆன்மிக பயணத்தில் செல்பவர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் உணவு டீ, காபி போன்றவை வழங்கப்படுகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.