மும்பை மோசடி வழக்கில் தயாரிப்பாளர் ரவீந்தருக்கு சம்மன்: கூட்டாளிகள் கைது

மும்பை மோசடி வழக்கில் தயாரிப்பாளர் ரவீந்தருக்கு சம்மன்: கூட்டாளிகள் கைது
ரவீந்திரன்

மும்பையில் நடந்த ₹5.5 கோடி மோசடி வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகருக்கு மும்பை சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். இந்த வழக்கில் ரவீந்தரின் கூட்டாளிகள் இருவர் கைது செய்யப்பட்டு மும்பைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு மும்பையைச் சேர்ந்த அஜய் ஜெகதீஷ் கபூர் என்பவரிடம், பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று கூறி ₹5.5 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக தயாரிப்பாளர் ரவீந்தர் உட்பட பல நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

கேரளாவைச் சேர்ந்த ரோகன் மேனன் என்பவரை மும்பை குற்றப்பிரிவு போலீசார் ஏற்கனவே கைது செய்திருந்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மோசடி செய்யப்பட்ட பணம் ரவீந்தர் சந்திரசேகரின் வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து, மும்பை சிபிசிஐடி போலீசார் நேற்று சென்னைக்கு வந்தனர். கே.கே. நகரில் உள்ள ரவீந்தரின் வீட்டிற்குச் சென்றபோது, அவர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்ததால், அவரை உடனடியாக கைது செய்யாமல் சம்மன் மட்டும் கொடுத்துவிட்டுச் சென்றுள்ளனர். இந்த சம்மனில் உடனடியாக விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் பெரும் லாபம் கிடைக்கும் என்று கூறி, அஜய் ஜெகதீஷ் கபூர் என்பவரிடம் ₹5.5 கோடி ரூபாய் மோசடி செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது

கூட்டாளிகள் கைது; வெளிநாட்டு பரிமாற்றம் அம்பலம்

ரவீந்தர் சந்திரசேகரின் கூட்டாளிகளான கிண்டியைச் சேர்ந்த மணிகண்டன் மற்றும் கொளத்தூரைச் சேர்ந்த பாண்டி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். இவர்கள் இருவரும் ட்ரான்சிட் வாரண்ட் பெற்று மும்பைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

போலீசாரின் விசாரணையில், ரவீந்தர் சந்திரசேகர் மோசடி பணத்தை கிரிப்டோ கரன்சியாக மாற்றி, வெளிநாட்டில் உள்ள வேறு ஒரு கணக்கிற்கு மாற்றியுள்ளது தெரியவந்துள்ளது. இந்த புதிய தகவல் வெளியானதையடுத்து, அவர் அடுத்தகட்டமாக கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக மும்பை போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மோசடி வழக்கு தொடர்பாக மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.