செப்டம்பர் 9-ல் குடியரசு துணைத் தலைவர் தேர்தல்

புதுடெல்லி: குடியரசு துணைத் தலைவர் தேர்தல் செப்டம்பர் 9-ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
நாட்டின் 14-வது குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கரின் பதவிக் காலம் 2027 ஆகஸ்ட் வரை இருந்த நிலையில், உடல்நிலையை காரணம் காட்டி, அவர் தனது பதவியை கடந்த மாதம் 21-ம் தேதி ராஜினாமா செய்தார்.
முழுமையான 5 ஆண்டு பதவி காலத்துக்குள், அந்த பதவி காலியாக நேரிட்டால்,உடனடியாக தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதால், அதற்கான நடைமுறைகளை தேர்தல் ஆணையம் கடந்த வாரம் தொடங்கியது. இதை தொடர்ந்து, மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்களை உள்ளடக்கிய வாக்காளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில், குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. அதன்படி, தேர்தல் நடத்தை விதிமுறைகள் வரும் 7-ம் தேதி தொடங்குகின்றன. அன்றே வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. மனுக்களை தாக்கல் செய்ய 21-ம் தேதி கடைசி நாள். மனுக்கள் பரிசீலனை 22-ம் தேதி நடைபெறும். மனுக்களை வாபஸ் பெறும் அவகாசம் 25-ம் தேதி முடிவடைகிறது.
போட்டி இருக்கும்பட்சத்தில், செப்டம்பர் 9-ம் தேதி தேர்தல் நடைபெறும். நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அறையில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடத்தப்படும். வாக்குப்பதிவு முடிந்ததும் உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டு, சில மணி நேரத்துக்குள் முடிவு வெளியாகும்.
ஆளும் கட்சி சார்பில் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவர் களமிறக்கப்படுவார் என்று தெரிகிறது. இண்டியா கூட்டணி சார்பிலும் வேட்பாளர் நிறுத்தப்படுவார் என்று கூறப்படுகிறது. தற்போது இரு அவைகளையும் சேர்த்து எம்.பி.க்களின் எண்ணிக்கை 782 ஆக உள்ளது. இவர்கள் அனைவரும் வாக்களிக்கும் நிலையில், குறைந்தபட்சம் 391 வாக்குகளைபெறும் வேட்பாளர் வெற்றி பெறுவார்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு (என்டிஏ), மக்களவையில் 293 பேரின் ஆதரவும், மாநிலங்களவையில் 129 பேரின் ஆதரவும் உள்ளது. நியமன எம்.பி.க்களும் ஆதரவு அளித்தால், என்டிஏவுக்கு மொத்தம் 422 உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும்.எனவே, பாஜக வேட்பாளர் வெற்று பெறுவது எளிதாக இருக்கும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் குடியரசு துணைத் தலைவர் 5 ஆண்டு காலம் இந்த பதவியில் இருப்பார்.