20 வருடமாக 100 சொகுசு கார்களை திருடி ஆடம்பர வாழ்க்கை....

20 வருடமாக 100 சொகுசு கார்களை திருடி ஆடம்பர வாழ்க்கை....
ஒரே ஒரு சென்னை காரால் சிக்கியது எப்படி?

சென்னை: தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் கைவரிசை காட்டிய பிரபல கார் திருடன் சட்டேந்திரசிங் ஷெகாவத், கடந்த 20 ஆண்டுகளாக தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் 100-க்கும் மேற்பட்ட சொகுசு கார்களை திருடி சொகுசாக வாழ்ந்து வந்தார். பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்பது போல், சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த எத்திராஜ் ரத்தினம் என்பவரது விலை உயர்ந்த காரை திருடியதால் சிக்கிக் கொண்டார். அவரை போலீசார் எப்படி புதுச்சேரியில் கைது செய்தார்கள் என்பதை பார்ப்போம்..

பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்பது பல மொழி.. எவ்வளவு புத்திசாலித்தனமாக திருடினாலும், சிக்குவதற்கான சூழல் ஒரு நாள் அமைந்தே தீரும்..அப்படித்தான் பிரபல திருடன் சென்னையில் உள்ள ஒரு காரை திருடி புதுச்சேரியில் சிக்கியுள்ளார்..

சென்னை அண்ணா நகர் கார்

சென்னை அண்ணாநகர் கதிரவன் காலனியை சேர்ந்த 53 வயதாகும் எத்திராஜ் ரத்தினம் என்பவர் கடந்த மாதம் 10-ந் தேதி தனது விலை உயர்ந்த சொகுசு காரை தனது வீட்டின் வாசலில் நிறுத்தி வைத்துள்ளார். அங்கு அதிகாலையில் வந்த மர்ம நபர் ஒருவர், நவீன கருவிகளை வைத்து சொகுசு காரை லாவகமாக திருடிச்சென்றுவிட்டார். தனது கார் திருடப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்த எத்திராஜ், அங்கு வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை எடுத்துக் கொண்டு உடனே, சென்னை திருமங்கலம் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கார் திருடனை தீவிரமாக தேடி வந்தனர்.

கண்காணிப்பு கேமரா காட்சி

இது தொடர்பான கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் சென்னை திருமங்கலம் போலீசார் கார் திருடனை தேடி வந்தார்கள். இந்த நிலையில் கார் கொள்ளையன் புதுச்சேரியில் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்தனர். இதையடுத்து அங்கு பதுங்கி இருந்த கார் திருடனை மடக்கிப்பிடித்த போலீசார் சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்தினார்கள்..

ராணுவ அதிகாரி மகன்

விசாரணையில், அவர் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த 43 வயதாகும் சட்டேந்திரசிங் ஷெகாவத் என்பதும், எம்.பி.ஏ. பட்டதாரியான இவருடைய தந்தை ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. சட்டேந்திரசிங் ஷெகாவத் ராஜஸ்தானில் இருந்து வந்து, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தங்கி இருந்து சொகுசு கார்களை நோட்டமிடுவதும், பின்னர் அதை நவீன கருவிகள் மூலம் லாவகமாக திருடியதும் விசாரணையில் தெரியவந்தது..

நேபாளத்தில் கார் விற்பனை

மேலும் கடந்த 20 வருடங்களாக திருடிய காரை, சாலை மார்க்கமாகவே ஓட்டிச்சென்று ராஜஸ்தான், நேபாளம் பகுதிகளில் விற்று சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்ததும் தெரிய வந்தது. இப்படி இதுவரை 20 ஆண்டுகளாக 100-க்கும் மேற்பட்ட சொகுசு கார்களை திருடி பணம் சம்பாதித்து ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்தாராம் இதையடுத்து போலீசார் தொடர் கார்கள் திருட்டு வழக்கில் சட்டேந்திரசிங் ஷெகாவத்தை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதனிடையே காரை பறிக்கொடுத்த 10-க்கும் மேற்பட்டவர்கள் சென்னை திருமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். தங்கள் காரை ஷெகாவத் திருடியிருக்கலாம் என்று நம்புகிறார்கள். போலீசார் இதுபற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்...