2025யாழ்ப்பாணம் மனிதப் புதைகுழி விவகாரம்: நாம் தமிழர் கட்சியினர் மதுரையில் ஆர்ப்பாட்டம்

இலங்கை செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில், தமிழர்களுக்கு நீதி வழங்க வேண்டி மேலூரில் நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர். மத்திய, மாநில அரசுகள் செம்மணி படுகொலைக்கு பன்னாட்டு நீதி விசாரணை நடத்தக் குரல் கொடுக்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தின்போது வலியுறுத்தினர்.
மதுரை மாவட்டம் மேலூர் பேருந்து நிலையம் முன்பாக, “இலங்கை யாழ்ப்பாணம் பகுதியில் உள்ள செம்மணி பகுதியில் தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் மீது ஐ.நா மனித உரிமை ஆணையம் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியின் சார்பில், தமிழர் மக்கள் இயக்கம், தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
“இலங்கை அரசு மீது ஐநா மனித உரிமை ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும். பன்னாட்டு நீதிமன்ற விசாரணையை நடத்தி சிங்கள ராணுவ குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். இந்திய அரசு வழக்கம்போல கள்ள மௌனம் காக்காமல் பன்னாட்டு விசாரணை நடத்தக் குரல் கொடுக்க வேண்டும்.
தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் தமிழக மக்களின் உணர்வைப் பிரதிபலிக்கும் வகையில் இலங்கை அரசைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்” என வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.