பல கோடி ரூபாய் மதிப்புள்ள பரிசுப் பொருட்களுக்கு ஆசைப்பட்டு சைபர் க்ரைம் கும்பலுக்கு உதவிய கணவன், மனைவி கைது

சென்னை: சைபர் க்ரைம் மோசடி கும்பலுக்கு உதவிய கணவன், மனைவி கைது செய்யப்பட்டனர். அரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் சல்மான் சலீம் (29). இவர் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். சைபர் மோசடி கும்பல் இவரிடம் ஆசை வார்த்தை கூறி ரூ.17 லட்சம் பெற்று மோசடி செய்துள்ளது. சல்மான் சலீம் இதுதொடர்பாக சென்னை மேற்கு மண்டல சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
போலீஸார் விசாரணை மேற்கொண்டதில், அவர் அனுப்பிய பணம் விருதுநகர் மாவட்டம், சிவகாசி லட்சுமிபுரத்தைச் சேர்ந்த புஷ்பா (35) மற்றும் அவரது கணவர் சதுரகிரி (41) ஆகியோரின் வங்கிக் கணக்குகளுக்கு சென்றது தெரியவந்தது. அந்த பணத்தை அவர்கள் காசோலை மூலம் எடுத்திருந்ததும் தெரியவந்தது.
இதையறிந்த போலீஸார் விருதுநகர் சென்று இருவரையும் கைது செய்தனர். விசாரணையில், ஃபேஸ்புக் மூலம் புஷ்பாவை அமெரிக்காவைச் சேர்ந்த கிறிஸ் ஓட்டோ என்ற நபர் தொடர்பு கொண்டுள்ளார். அவர், தான் சொன்னபடி நடந்து கொண்டால் பல கோடி ரூபாய் மதிப்பிலான பரிசுப் பொருட்களை அனுப்பி வைப்பதாக ஆசைவார்த்தை கூறியுள்ளார். இதை கணவரிடம் அவர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அமெரிக்க நபர் கூறியபடி 3 வங்கிக் கணக்குகளை புஷ்பா மற்றும் சதுரகிரி தொடங்கினர். அந்த வங்கிக் கணக்குக்கு அனுப்பப்படும் பணத்தை எடுத்து, கிறிஸ் ஓட்டோ கூறிய பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இப்படி தங்கள் கணக்குக்கு அனுப்பப்பட்ட ரூ.17 லட்சத்தில், ரூ.3 லட்சத்து 67 ஆயிரத்தை கமிஷனாக வைத்துக் கொண்டு மீதமுள்ள பணத்தை அனுப்பி வைத்தனர்.
அந்த மோசடி கும்பல், அரும்பாக்கத்தைச் சேர்ந்த சல்மான் சலீம் என்பவரை புஷ்பா வங்கிக்கணக்குக்கு பணம் அனுப்ப வைத்து, அந்த பணத்தை புஷ்பா மூலம் பெற்றதும் தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவாக உள்ள சைபர் க்ரைம் மோசடி கும்பலை தனிப்படை அமைத்து போலீஸார் தேடி வருகின்றனர்.