கையில வேலை இருக்கு.. கவலை எதுக்கு! ரூ.3 லட்சத்தை அள்ளித் தருது அரசு! ‘இதை’ மட்டும் செய்தால் போதுமே!

திண்டுக்கல்: தமிழக அரசு சார்பில் கலைஞர் கைவினைத் திட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் அறிவிக்கப்பட்டு வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு அரசின் "கலைஞர் கைவினைத் திட்டம்" திட்டத்தில் பயன் பெற தகுதியுள்ளவர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில்," தமிழக அரசால் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் கைவினை கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையிலும், கைவினை கலைஞர்களை தொழில் முனைவோர்களாக உருவாக்கிடும் நோக்கத்துடனும் "கலைஞர் கைவினைத் திட்டம் (KKT)" என்ற திட்டத்தினை அறிமுகப்படுத்தி, அரசு ஆணை வெளியிட்டுள்ளது..
இத்திட்டத்தில் கைவினை கலைஞர்களுக்கு மானியத்துடன் கூடிய வங்கி கடன் உதவியும் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சியும் வழங்கப்படும்.
கலைஞர் கைவினைத் திட்டத்தில் அதிகபட்சமாக ரூ.50,000 வரை 25 சதவீதம் மானியத்துடன் ரூ.3,00,000 வரை வங்கி கடன் உதவியும், 5 சதவீதம் வட்டி மானியமும் வழங்கப்படும். இத்திட்டத்தில் விண்ணப்பிக்க 35 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். கைவினைத் தொழில் மற்றும் கைவினைக் கலைகளில் ஈடுபட்டு வரும் மக்கள் பயனடையும் வகையில், புதிய தொழில் தொடங்கவும், செய்யும் தொழிலை விரிவாக்கம் செய்திடவும் கடனுதவி வழங்கப்படும்..
கட்டட வேலைகள், மர வேலைப்பாடுகள், பாரம்பரிய முறையில் ஜவுளி அச்சிடுதல், தோல் கைவினைபொருட்கள், காலணிகள் தயாரித்தல், மீன் வலை தயாரித்தல், நகை செய்தல், சிகையலங்காரம், அழகுக்கலை, துணி நெய்தல், துணிகளில் கலை வேலைப்பாடுகள், பூட்டு தயாரித்தல், தையல் வேலை, கூடை பின்னுதல், கயிறு, பாய் பின்னுதல், துடைப்பான் செய்தல், மண் பாண்டங்கள் சுடு மண் வேலைகள், பொம்மை தயாரித்தல், படகுக் கட்டுமானம், துணி வெளுத்தல், சிற்ப வேலைப்பாடுகள், கற்சிலை வடித்தல், ஓவியம் வரைதல், வண்ணம் பூசுதல், கண்ணாடி வேலைப்பாடுகள், பாரம்பரிய இசைக்கருவிகள் தயாரித்தல், மலர் வேலைப்பாடுகள், உலோக வேலைப்பாடுகள், பாசிமணி வேலைப்பாடுகள், பழங்குடியினரின் இயற்கை சேகரிப்புகள், கைவினைப் பொருட்கள், மூங்கில், பிரம்பு, சணல், பனை ஓலை வேலைப்பாடுகள் போன்ற 25 வகையான கைவினைத் தொழில்கள் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க தகுதியுடைய தொழில்களாக அறிவிக்கப்பட்டுள்ளது...
www.msmeonline.tn.gov.in/kkt என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மேற்காணும் தொழிலில் ஈடுபட்டுள்ள கைவினைஞர்கள் இந்த நல்வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளலாம். திட்டம் குறித்த மேலான தகவல்களைப் பெற, பொது மேலாளர், மாவட்டத் தொழில் மையம், சிட்கோ தொழிற்பேட்டை, திண்டுக்கல் அவர்களை நேரடியாகவோ அல்லது தொலைபேசி எண்(0451-2904215, 8925533943) வாயிலாகவோ தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம், என மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் தெரிவித்துள்ளார்" என கூறப்பட்டுள்ளது.