4000 ஆசிரியர் காலிப்பணியிடம் நிரப்ப நடவடிக்கை.! குட் நியூஸ் சொன்ன தமிழக அரசு

அரசு கல்லூரிகளில் ஆசிரியர் மற்றும் முதல்வர் பணியிடங்களில் காலிப்பணியிடங்கள் இருப்பது உண்மை என்றாலும், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்க கௌரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்
கல்லூரிகளில் ஆசிரியர்கள்
கல்வி தான் மாணவர்களின் நல்வழிப்படுத்தும் ஆயுதமாக உள்ளது. அந்த வகையில் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு திட்டங்கள் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. மாணவர்களுக்கு உதவிடும் வகையில் கல்வி உதவி தொகை, இலவச சைக்கிள், பேருந்து பயண அட்டை, புத்தகப்பை என திட்டங்கள் நடைமுறைப்படுத்தி வருகிறது. இதே போல ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிடவும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதனிடையே உயர்கல்வியான கல்லூரியில் ஆசிரியர்கள் காலிப்பணியிடத்தால் மாணவர்கள் கல்வி பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது. இந்த நிலையில் அரசு கல்லூரிகளில் முதல்வர்கள் மற்றும் பேராசிரியர்கள் காலிப்பணியிடங்கள் குறித்து வெளியாகியுள்ள தகவலுக்கு பதிலளித்துள்ளது தமிழக அரசு , இது தொடர்பாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாட்டில் மொத்தம் 180 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன
பேராசிரியர்கள் நியமனம்
இந்த கல்வியாண்டில் மட்டும் முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி கல்லூரிகளே இல்லாத பகுதிகளில் புதியதாக 15 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. அனுமதிக்கப்பட்ட கல்லூரி பேராசிரியர்கள் பணியிடங்கள் குறித்தும் நிரப்பபட்ட முதல்வர்கள் குறித்தும் முற்றிலும் தவறான செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது. உதாரணமாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 1,500 பேராசிரியர்கள் மட்டுமே உள்ளனர் என செய்தி வரப்பெற்றுள்ளது.
ஆனால், உண்மையில் 4,711 பேராசிரியர்கள் நிரந்தரமாக பணியாற்றி வருகின்றனர். 9,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது என தெரிவித்துள்ளதும் தவறானதாகும். காலிப்பணியிடங்களில் கௌரவ விரிவுரையாளர்கள் நியமனம் செய்யப்பட்டு மாணவர்களின் கல்வி பாதிக்காமல் இருக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
4000 ஆசிரியர்கள் பணியிடம் நிரப்ப நடவடிக்கை
2015-ஆம் ஆண்டிற்கு பிறகு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்படாததால் இந்த காலிப்பணியிடங்கள் ஏற்பட்டுள்ளன. இதனை சரிசெய்ய இவ்வரசு பொறுப்பேற்றவுடன் 4,000 ஆசிரியர் பணியிடங்களை அரசு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பிட ஆணை வெளியிடப்பட்டது. பல்வேறு நிலையில் இதன்மீது 54 வழக்குகள் தொடரப்பட்டதால் நாளதுவரை மேற்படி பணியிடங்கள் நிரப்பிட காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. வழக்குகளை விரைவில் முடித்து மேற்படி காலிப்பணியிடங்களை நிரப்பிட உரிய சட்டபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பல்வேறு வழக்குகளால் நிரந்தர உதவிப் பேராசிரியர்களை தேர்வு செய்ய காலதாமதம் ஆகும் நிலையிலும், மாணவர்களின் கல்வி நலன் கருதி கௌரவ விரிவுரையாளர்கள் காலிப்பணியிடங்களில் நிரப்பப்பட்டு, கல்வி பணியாற்றி வருகின்றனர். மேலும், தற்போது சுமார் 800 பணியிடங்களில் கௌரவ விரிவுரையாளர்களை நிரப்பிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் மாணவர்களுக்கு உயர்கல்விச் சேவை எந்த வகையிலும் தமிழ்நாட்டில் பாதிக்கப்படவில்லை
கல்லூரி முதல்வர்கள் காலிப்பணியிடம்
உயர்கல்வித் துறையின் கீழ் செயல்படும் 58 நிலை-| அரசு கல்லூரிகளில் 46 நிரந்தர முதல்வர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் காலியாக உள்ள 12 முதல்வர் பணியிடங்களில், ஏற்கனவே ஒப்பளிக்கப்பட்ட பட்டியல் (approved Panel) மற்றும் அடுத்து தெரிவு செய்யப்பட உள்ள பட்டியலிலிருந்து முதல்வர்களை பதவி உயர்வு மூலம் நிரப்பிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
1998-ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தெரிவு செய்யப்பட்டவர்களின் பணிமூப்புப் பட்டியல் 2023-இல் வெளியிடப்பட்டது. அப்பணிமூப்புப் பட்டியலை ஏற்றுக்கொள்ளாமல் ஆசிரியர்கள் வழக்கு (WP எண் 20170/2023) தொடுத்து தடையாணை பெற்றுள்ளனர். இதன் காரணமாக கல்லூரி முதல்வர்கள் பதவி உயர்வு வழங்குவதில் அரசுக்கு தாமதமாகி உள்ளது இவ்வழக்கில் எதிர்உறுதி ஆவணம் உடனடியாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
விரைவில் கல்லூரிகளில் முதல்வர்கள் நியமனம்
இதன் மீதான இறுதி ஆணை இதுவரை நீதிமன்றத்தால் வெளியிடவில்லை. வழக்கினை விரைந்து முடித்திட சட்ட ரீதியான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வழக்கு முடிவுக்கு வந்தவுடன் காலியாக உள்ள கல்லூரிகளில் முதல்வர்கள் பணியமர்த்தப்படுவார்கள். எனினும் கல்லூரியின் நிர்வாக நலன் மற்றும் மாணவர்கள் நலன் கருதி, முதல்வர் பணியிடம் காலியாக உள்ள கல்லூரிகளில் கல்லூரியின் மூத்த பேராசிரியர்கள் முதல்வர்களாக முழு கூடுதல் பொறுப்பில் நியமிக்கப்பட்டு சிறப்பாக பணியாற்றி வருகின்றனர் என அமைச்சர் கோவி செழியன் தெரிவித்துள்ளார்.