டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு.. எல்லோருக்கும் சம மதிப்பெண் போடுங்க! அண்ணாமலை அட்வைஸ்

சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் தமிழ் பாடத்தில் கேட்ட 100 கேள்விகளில் 50-க்கும் மேற்பட்டவை பாடத்திட்டத்தில் இல்லாதது என அண்ணாமலை விமர்சித்துள்ளார். மேலும், மறு தேர்வு நடத்த வேண்டும் அல்லது இல்லாத கேள்விகளுக்கான மதிப்பெண்களை வழங்க வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்...
தமிழகத்தில் விஏஓ, இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்காக குரூப் 4 தேர்வு கடந்த 12 ஆம் தேதி நடைபெற்றது. மொத்தம் 3,935 பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட இந்த தேர்வை சுமார் 11 லட்சம் பேர் எழுதினர். இந்த தேர்வு மிகவும் கடினமாக இருந்ததாகவும் பாடத்திட்டத்தில் இல்லாத கேள்விகளும் கேட்கப்பட்டு இருந்ததாக டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் பலரும் கூறியிருந்தனர்..
குறிப்பாக தமிழில் மிகவும் கடினமாக வினாக்கள் அமைக்கப்பட்டு இருந்ததாக தேர்வர்கள் கூறியிருந்தனர். அது போக வினாத்தாள் ஆம்னி பேருந்தில் கொண்டு செல்லப்பட்டதாகவும் மதுரையில் சர்ச்சை எழுந்தது. எனினும் வினாத்தாள் கசியவில்லை என்று டிஎன்பிஎஸ்சி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் மூன்று மாதத்தில் வெளியிடப்படும் எனவும் டிஎன்பிஎஸ்சி கூறியுள்ளது...
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் பல்வேறு குளறுபடிகள் நடைபெற்று இருப்பதால் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் வலியுறுத்தியுள்ளனர். இந்த நிலையில், தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையும் குரூப் 4 தேர்வில் தமிழ் பாடத்திட்டத்தில் இல்லாத 100-க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டு இருப்பதாக அண்ணாமலை விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது:-..
பாடத்திட்டத்தில் இல்லாத கேள்விகள்
TNPSC குரூப் 4 தேர்வில், மொத்தம் 200 கேள்விகளில், தமிழ்ப் பாடத்திற்கு மட்டும் 100 கேள்விகள் உள்ளன. கடந்த 12.07.2025, சனிக்கிழமை அன்று நடைபெற்ற தேர்வில், தமிழ்ப் பாடத்தில் கேட்கப்பட்ட 100 கேள்விகளில், சுமார் 50-க்கும் மேற்பட்ட கேள்விகள், பாடத்திட்டத்தில் இல்லாத, கேள்விகளே புரியாத வண்ணம், மிகவும் சிக்கலான கேள்விகளாகக் கேட்கப்பட்டுள்ளன என, தேர்வாளர்கள் தெரிவித்துள்ளனர்..
எதிர்மறை மதிப்பெண் இல்லை என்பதால், அனைத்துத் தேர்வாளர்களும், ஏதோ ஒரு விடையை தேர்வு செய்திருக்கிறார்கள். இதனால் தேர்வுக்குக் கடினமாக உழைத்துத் தயாரானவர்களும், இறுதியில் அதிர்ஷ்டம் இருந்தால்தான் வெற்றி பெற முடியும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். பல ஆண்டுகளாக அரசு வேலைக்குத் தங்கள் நேரத்தையும், கடின உழைப்பையும் கொடுத்துப் பாடுபட்ட இளைஞர்கள், இறுதியில், பாடத்திட்டத்தில் இல்லாத கேள்விகளால், தங்கள் வாய்ப்பை இழக்கும் நிலை ஏற்பட்டிருப்பது வருத்தத்துக்குரியது மட்டுமின்றி, தவிர்க்கப்பட வேண்டியதும் கூட....
யாரோ செய்த தவறுக்காக
அரசு வேலை என்ற கனவுகளோடு தேர்வுக்குத் தயாரான இளைஞர்களையும், அவர்களது குடும்பத்தினரையும், பாடத்திட்டத்தில் இல்லாத கேள்விகளைக் கேட்டு, யாரோ செய்த தவறுக்காகப் பலியாக்குவதில் நியாயமில்லை. எனவே, தமிழக அரசு, கடந்த சனிக்கிழமை நடைபெற்ற TNPSC குரூப் 4, தமிழ்ப் பாடத்துக்கான தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும்.
அல்லது, பாடத்திட்டத்தில் இல்லாத கேள்விகளுக்கான மதிப்பெண்களை, அனைத்து மாணவர்களுக்கும் சமமாக வழங்க வேண்டும் அல்லது, ஒட்டுமொத்தமாக அந்தக் கேள்விகளை நீக்கி, மதிப்பெண் கணக்கிட வேண்டும் என்றும், மீண்டும் இது போன்ற பாடத்திடத்தில் இல்லாத கேள்விகள் தேர்வில் கேட்கப்படாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்..