திருமலா பால் நிறுவன மேலாளர் தற்கொலை செய்து கொண்டதாகவே தெரிகிறது’ - சென்னை காவல் ஆணையர்

சென்னை: திருமலா பால் நிறுவனத்தில் கருவூல மேலாளராகப் பணியாற்றிய நவீனின் மரணம் தற்கொலை போன்றே தெரிகிறது. இது தொடர்பாக அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்ததில் நவீன் தற்கொலை செய்துகொண்டதாகவே தெரியவந்துள்ளது என சென்னை மாநகரக் காவல் ஆணையர் அருண் தெரிவித்தார்.
இதுகுறித்து இன்று (சனிக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த காவல் ஆணையர் அருண், "நவீன் தற்கொலை தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. இதுவரை நடந்த விசாரணையில், நவீன் மரணம் தற்கொலை போன்றே தெரிகிறது. இது தொடர்பாக அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்ததில் நவீன் தற்கொலை செய்துகொண்டதாகவே தெரிகிறது.
காவல் துணை ஆணையர் பாண்டியராஜன் நேரில் அழைத்து விசாரித்ததாக இதுவரை எங்களுக்கு தெரியவில்லை. மாதவரம் திருமலா பால் நிறுவனத்தின் சட்ட மேலாளர் சென்னை மத்திய குற்றப்பிரிவில், தங்கள் நிறுவன நிதிப்பிரிவின் கருவூல மேலாளரான நவீன் பொலினேனி சுமார் ரூ.44 கோடி மோசடி செய்ததாக புகார் அளித்தார். அது தொடர்பான ஆவணங்கள் மற்றும் வங்கி கணக்கு பட்டியலை சமர்ப்பிக்க அறிவுறுத்தினோம். அந்தப் புகார் மனு விசாரணை நிலையிலேயே உள்ளது.
ரூ.44 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதை துணை ஆணையர் விசாரித்திருக்க கூடாது. அது தவறு என்பதால்தான், பாண்டியராஜன் மீது நடவடிக்கை எடுத்துள்ளோம். நவீன் அனுப்பிய மின்னஞ்சலில் அவர் காவல்துறை மிரட்டல் விடுத்ததாக எங்கும் குறிப்பிடப்படவில்லை. காவல் துணை ஆணையர் பாண்டியராஜன் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாண்டியராஜனுக்கு நான் தான் விடுப்பு கொடுத்து அனுப்பினேன்” என்றார்
சம்பவம் நடைபெறுவதற்கு 2 நாட்களுக்கு முன்பே, துணை ஆணையர் பாண்டியராஜனுக்கு நான் தான் விடுமுறை கொடுத்தேன். இந்த வழக்கில் அரசியல் பின்புலம் எதுவும் இல்லை. நிதி மோசடி செய்ததாக மின்னஞ்சலில் அனுப்பிய கடிதத்தில் அவர் ஒப்புக் கொண்டுள்ளார். அந்தப் பணத்தை வைத்து அவர் நிலம் வாங்கியுள்ளார். அதை அனைத்தையும் திருப்பி தருவதாக அவர் கூறும் போது, அவருக்கு மேலும் அழுத்தம் வருகிறது. அதனால், அவர் வாங்கிய நிலத்திலேயே தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
நுங்கம்பாக்கத்தில் பார் ஒன்றில் நடந்த மோதல் விவகாரம், அடுத்தடுத்து நடைபெற்ற விசாரணையில் போதைப் பொருள் வழக்காக மாறி உள்ளது. அது தொடர்பாக 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா உள்பட 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 6 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இந்த வழக்கு விசாரணை மேலும் தொடர்கிறது.
சென்னையில் இதுவரை 54 போதைப் பொருள் நெட்வொர்க்குகளை பிடித்திருக்கிறோம். இதில் 23 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக வெற்றிக் கழக கட்சியினரின் ஆர்ப்பாட்டத்துக்கு நாங்கள் எந்த அனுமதியும் மறுக்கவில்லை. ஆர்ப்பாட்டத்துக்கு போலீஸார் அனுமதி கொடுக்கமாட்டார்கள் என அவர்களாகவே நினைத்துக் கொண்டு சென்றுவிடுகிறார்கள்.
அண்ணா பல்கலைக்கழக சம்பவத்துக்கு பிறகு பெண்கள் வன்கொடுமை தொடர்பாக புகார் அளிப்பவர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில், தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி, குற்றத்தில் ஈடுபட்டவர், புகார் தாரரை மீண்டும் எந்தவகையில் தொந்தரவு செய்தாலும் அது கடுமையான குற்றமாகும். இதை மீறுவோருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.