சுற்றுலா பயணிகள் வீசும் உணவுகளால் மழுங்கி போகும் விலங்குகளின் வேட்டை குணம்!

சுற்றுலா பயணிகள் வீசும் உணவுகளால் மழுங்கி போகும் விலங்குகளின் வேட்டை குணம்!
சுற்றுலா பயணிகள் வீசும் உணவுகளால் மழுங்கி போகும் விலங்குகளின் வேட்டை

நீலகிரி மாவட்டத்தில் உள்ள வன உயிரினங்களுக்கு இரக்கம் காட்டுவதாக சுற்றுலாப்பயணிகள் உணவு அளிப்பதால், விலங்குகளின் வேட்டை குணம் மழுங்கி வருவதுடன், அவை விபத்துகளில் சிக்கி உயிரிக்கும் அபாயம் நீடிக்கிறது.

தமிழகத்தில் 56 சதவீதம் வனப்பரப்பை கொண்டுள்ளது நீலகிரி மாவட்டம். பெரும்பாலான பகுதிகள் வனத்தை ஒட்டியுள்ளதால், இங்கு வசிக்கும் மக்களுக்கு வன விலங்குகளுடன் பரிச்சயம் அதிகம்.நீலகிரி மாவட்டம் சுற்றுலா தலமாகவும் உள்ளதால், இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் வன விலங்குகளை கண்டதும் ஆர்ப்பரிக்கின்றனர். குறிப்பாக நெடுஞ்சாலைகள், முதுமலை புலிகள் காப்பகங்களை கடந்து செல்லும் போது விலங்குகளை கண்டதும், அவற்றுக்கு உணவு அளிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இவர்களது இரக்கம் இந்த விலங்குகளின் உணவு வேட்டை குணத்தை மழுங்கச் செய்து வருகிறது.

முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் பந்திப்பூர் புலிகள் காப்பகங்கள் அருகருகே உள்ளன. இந்த காப்பகங்களில் புலி, யானை, மான், காட்டெருமை, மயில் உள்ளிட்ட உயிரினங்கள் உள்ளன. இந்த காப்பகங்களின் மத்தியில் தேசிய நெடுஞ்சாலை 67 செல்கிறது. மூன்று மாநில போக்குவரத்துக்கான முக்கிய சாலை என்பதால், இந்த சாலையில் வாகன போக்குவரத்து 24 மணி நேரமும் உள்ளது.

வாகன போக்குவரத்து தொடர்ந்து இருப்பதால், வன விலங்குகள் சாலையைக் கடந்து காப்பகத்தின் மறுபுறத்துக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டு வந்தது. சாலையை கடக்கும் போது விலங்குகள் வாகனங்களில் சிக்கி விபத்துக்குள்ளாகும் நிலை இருந்து வந்தது. இதை கருத்தில் கொண்டு, இந்த தேசிய நெடுஞ்சாலையில் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், வன விலங்குகள் சாலையை கடப்பதில் இருந்த சிக்கல் தீர்ந்தது