.9 கோடி இழப்பீடு கேட்டு நடிகர் ரவி மோகன் வழக்கு.. தயாரிப்பு நிறுவனம் பதில் அளிக்க ஐகோர்ட் ஆணை

சென்னை: ரூபாய் 9 கோடி இழப்பீடு கேட்டு நடிகர் ரவி மோகன் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். ரவி மோகன் தொடர்ந்த வழக்கில் பட தயாரிப்பு நிறுவனம் பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
படத்தில் நடிப்பதற்காக பெற்ற 6 கோடி ரூபாய் முன்பணத்தை திரும்ப அளிக்கக்கோரி பாபி டச் கோல்டு யுனிவர்சல் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தாக்கல் செய்த மனு குறித்து நடிகர் ரவி மோகன் பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் புதிய மனு தாக்கல் செய்தார் ரவி மோகன்.
இது தொடர்பாக
பாபி டச் கோல்டு யுனிவர்சல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குனர் பாலசந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், தங்களது நிறுவனத்தின் சார்பில் இரண்டு படங்களில் நடிப்பதற்காக நடிகர் ரவி மோகனுடன் கடந்த 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒப்பந்தம் செய்யப்பட்டதாக கூறியுள்ளார். முதல் படத்திற்கு ஊதியமாக பதினைந்து கோடி ரூபாய் ஊதியமாக பேசப்பட்டு ஆறு கோடி ரூபாய் முன்பணமாக கொடுக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்
ஒப்பந்தப்படி தங்களது நிறுவனத்தின் படத்தில் நடிக்காமல் மற்ற நிறுவன படங்களில் நடித்த போது முன்பணத்தை திருப்பி கேட்டதாகவும் அப்போது ஒப்பந்தத்தில் இருந்து விலகிக்கொள்வதாகவும் முன்பணத்தை திருப்பி அளிப்பதாக ரவி மோகன் கூறியதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆனால், பணத்தை திரும்ப கொடுக்காத நிலையில் தனது சொந்த படத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளதாகவும், அதன் மூலம் ப்ரோ கோட் என்ற படத்தை தயாரிக்க உள்ளதாக ரவி மோகன் வெளியிட்ட அறிவிப்பை கேட்டு தாங்கள் அதிர்ச்சி அடைந்ததாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது
இந்த மனு நீதிபதி அப்தூல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தங்களது நிறுவனம் அளித்த முன்பணத்தை ரவி மோகன் தனது சொந்த படத் தயாரிப்புக்கோ அல்லது சொந்த செலவுகளுக்கோ பயன்படுத்த வாய்ப்புள்ளதால் ப்ரோ கோட் படத்தை தயாரிக்க தடை விதிக்க வேண்டும் எனவும், வேறு நிறுவனங்களின் தயாரிப்பிலும் நடிக்க ரவி மோகனுக்கு தடை விதிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். மேலும், ஆறு கோடி ரூபாய்க்கான உத்தரவாதத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.
ரவி மோகன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆறு கோடி ரூபாய் பெற்றுக்கொண்டது உண்மை தான் எனவும் ஆனால் கால்ஷீட் கொடுத்தும் பணிகளை தொடங்காததால் தனக்கு ஏற்பட்ட நஷ்டத்துக்கு ஈடாக கூடுதலாக பத்து கோடி ரூபாயை பாபி டச் கோல்டு யுனிவர்சல் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் வழங்க வேண்டுமென வாதிட்டார்.
இந்நிலையில், பட தயாரிப்பு நிறுவனத்திடம் ரூ.9 கோடி இழப்பீடு கேட்டு நடிகர் ரவி மோகன் மனு தாக்கல் செய்துள்ளார். ஒப்பந்தப்படி குறித்த காலத்தில் படப்பிடிப்பை துவங்காததால் இழப்பு ஏற்பட்டுள்ளதாக நடிகர் ரவி மோகன் மனுவில் தெரிவித்துள்ளார். 80 நாட்கள் கால்ஷீட் கொடுத்தும் படப்பிடிப்பை துவங்கவில்லை என ரவி மோகன் மனுவில் குற்றம்சாட்டியுள்ளார்.
நடிகர் ரவி மோகன் தாக்கல் செய்த வழக்கிற்கு பாபி டச் கோல்டு யுனிவர்சல் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பு நிறுவனம் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் 23 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்