பிரம்மபுத்திரா நதியில் கட்டப்படும் அணையால் இந்தியாவுக்கு பாதிப்பில்லை : சீனா சொல்கிறது..

பிரம்மபுத்திரா நதியில் கட்டப்படும் அணையால் இந்தியாவுக்கு பாதிப்பில்லை : சீனா சொல்கிறது..
பிரம்மபுத்திரா நதியில் ஏற்படும் அளவுக்கு அதிகமான வெள்ளப்பெருக்கு தடுக்கப்படும் என்று சீனா கூறியுள்ளது.;

பெய்ஜிங்,

. உலகிலேயே மிகப்ெபரிய அணையை பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே ரூ.14 லட்சம் கோடி மதிப்பில் கட்டத்தொடங்கியுள்ளது சீனா. யார்லங் ஸாங்போ என்ற பெயரில்( பிரம்மபுத்திரா) திபெத் பிராந்தியத்தில் ஓடும் இந்த நதியின் குறுக்கே அணை கட்டுவதற்கான தொடக்க விழா கடந்த ஜூலை 19ஆம் தேதி சீனப் பிரதமர் லீ கியாங் தலைமையில் நடந்தது.

பிரம்மபுத்திரா நதி சீனாவில் பிறந்தாலும், இந்தியா வழியாக கடந்து வங்கதேசத்திற்கு சென்று கடலில் கடக்கிறது. சீனா அணை கட்டி அதை தடுக்கும் பட்சத்தில் இந்தியா மற்றும் வங்கதேச பகுதிகள் கடுமையாக பாதிக்கப்படும். இந்த புதிய அணைக்கு மொடுடோ நீர்மின் நிலையம் என பெயர் கூட சீனா சூட்டிவிட்டது. இந்த மெகா அணை கட்டப்பட்டுவிட்டால், உலகின் மிகப் பெரிய அணை புதிய சாதனை நிகழ்த்தப்படும். அதே நேரத்தில் பிரம்மபுத்திரா நதியின் நீரோட்டம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இதனால், இந்தியாவும், வங்கதேசமும் அணை கட்டுவதற்கு ஆட்சேபம் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், இந்த அணை விவகாரம் கு றித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் குவோ ஜியாகுன் கூறியதாவது:அணை கட்டப்படுவதால், பிரம்மபுத்திரா நதி பாய்ந்தோடும் நாடுகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. மாறாக பிரம்மபுத்திரா நதியில் ஏற்படும் அளவுக்கு அதிகமான வெள்ளப்பெருக்கு தடுக்கப்படும். இதனால், இயற்கை பேரிடர் நிகழ்வது குறையும். அணை கட்டும் திட்டம் தொடர்பாக இந்தியா மற்றும் வங்கதேசத்திடம் உரிய விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன. பிரம்மபுத்திரா பாய்ந்தோடும் நாடுகளின் நலனிலும் சீனா அக்கறை கொண்டுள்ளது.அணை கட்டுமான திட்டத்தால் ஏற்படும் நன்மை நிச்சயம் இந்தியா மற்றும் வங்கதேசத்துக்கும் பகிர்ந்தளிக்கப்படும். அணை கட்டுவது என்பது சீனாவின் இறையாண்மைக்கு உட்பட்டது" என்று தெரிவித்தார்..