மின் கம்பம் மாற்ற ரூ.15,000 லஞ்சம்: கிருஷ்ணகிரியில் மின் வாரிய அதிகாரி கைது

கிருஷ்ணகிரி: விவசாய நிலத்தில் உள்ள மின் கம்பத்தை இடம் மாற்ற ரூ.15,000 லஞ்சம் வாங்கிய கிருஷ்ணகிரி மாவட்டம் அத்திமுகம் மின்வாரிய உதவி பொறியாளர் உதயகுமார் என்பவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி வட்டம், வெங்கடேசபுரம் அடுத்த இனகபீரணப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி கதிரப்பா, 49. அவரது நிலத்தில் கோழிப்பண்ணை அமைப்பதற்காக, நிலத்தின் நடுவே அமைந்துள்ள எல்.டி., லைன் மின் கம்பத்தினை அகற்றி இடமாற்றம் செய்து ஹச்.டி லைன் மின் கம்பம் அமைக்கவேண்டி விண்ணப்பித்தார்.
ஆன்லைன் மூலம் கட்டணம் ரூ.2145 அரசுக்கு செலுத்தி மின் பகிர்மான கழகம் அத்திமுகம் உதவி பொறியாளர் அலுவலகத்திற்கு விண்ணப்பித்துள்ளார். 15 நாட்களுக்கு முன் அலுவலகத்திற்கு சென்று மின் உதவி பொறியாளர் உதயகுமாரை நேரில் சந்தித்து மின் கம்பத்தினை மாற்றி அமைப்பது பற்றி கேட்டுள்ளார்.
அப்போது, அரசுக்கு செலுத்தவேண்டிய பணத்தை
ஆன்லைனில் செலுத்திவிட்டு எனக்கு ரூ.15,000 கொடுத்தால், உடனடியாக மேற்படி கம்பத்தை மாற்றிதருவதாக கூறியுள்ளார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத விவசாயி இன்று காலை கிருஷ்ணகிரி ஊழல் தடுப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவியிடம் புகார் அளித்துள்ளார்.
வழக்கு பதிவு செய்த இன்ஸ்பெக்டர் ரசாயனம் தடவிய பணம் ரூ.15,000 த்தை புகார்தாரரிடம் கொடுத்து அனுப்பியுள்ளார். மேற்படி பணத்தை புகார்தாரரிடமிருந்து உதவி பொறியாளர் உதயகுமார் லஞ்சமாக வாங்கிய போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
அவரிடமிருந்து சில ஆவணங்களை கைப்பற்றி மேல் விசாரணை செய்து வருகின்றனர்.