வாகன உரிமையாளர்களுக்கு குட் நியூஸ்... தேசிய நெடுஞ்சாலைகளில் 50% வரை சுங்க கட்டணம் குறைப்பு

வாகன உரிமையாளர்களுக்கு குட் நியூஸ்... தேசிய நெடுஞ்சாலைகளில் 50% வரை சுங்க கட்டணம் குறைப்பு
இதற்கு முன், தேசிய நெடுஞ்சாலைகளின் கட்டமைப்பு பகுதிகளுக்கான சுங்கக் கட்டணம், சாதாரண கட்டணத்தை விட 10 மடங்கு அதிகமாக வசூலிக்கப்பட்டு வந்தது.

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மேம்பாலங்கள், உயர்மட்ட சாலைகள் போன்ற கட்டமைப்பு பகுதிகளுக்கான சுங்கக் கட்டணத்தை 50% வரை குறைத்து மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த முடிவு, குறிப்பாக சரக்கு வாகன உரிமையாளர்களுக்கு பெரும் பயனை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம், தேசிய நெடுஞ்சாலைகள் கட்டண விதிகள், 2008-ஐ திருத்தி, கட்டமைப்பு பகுதிக்கான கட்டணத்தை கணக்கிட புதிய முறையை வெளியிட்டுள்ளது. இதற்கு முன், தேசிய நெடுஞ்சாலைகளின் கட்டமைப்பு பகுதிகளுக்கான சுங்கக் கட்டணம், சாதாரண கட்டணத்தை விட 10 மடங்கு அதிகமாக வசூலிக்கப்பட்டு வந்தது.

உதாரணமாக, ஒரு தேசிய நெடுஞ்சாலையின் மொத்த நீளம் 40 கி.மீ. என்றும், அதில் 30 கி.மீ. கட்டமைப்பு பகுதியாகவும், 10 கி.மீ. நிகர சாலை நீளமாகவும் இருந்தால், 10 x 30 கி.மீ. + 10 கி.மீ = 310 கி.மீ என்று கணக்கிடப்படும். இல்லையென்றால், தேசிய நெடுஞ்சாலையின் மொத்த நீளத்தின் 5 மடங்காக கணக்கிடப்படும். அதாவது, 5 x 40 கி.மீ. = 200 கி.மீ என்று எடுத்துக் கொள்ளப்படும்.

இதில் குறைவான நீளம் 200 கி.மீ. என்பதால், அதற்கான கட்டணமே வசூலிக்கப்படும். இதனால், ஒரு வழி கார் பயணத்திற்கு ரூ. 1.46/கி.மீ. என்ற விகிதத்தில் ரூ. 292 மட்டுமே செலவாகும். இது டாக்சிகள் மற்றும் வணிக வாகனங்களுக்கு இன்னும் அதிக பலனைத் தரும்.

இந்த புதிய விதி, தேசிய நெடுஞ்சாலைகளில் பாதிக்கும் மேல் கட்டமைப்பு பகுதிகளைக் கொண்ட சாலைகளில் பயணிக்கும் பயணிகளுக்கு மிகப்பெரிய நிவாரணமாக இருக்கும். பாலங்கள் அல்லது உயர்மட்ட சாலைகளை அமைப்பதற்கான அதிக கட்டுமான செலவுகளை ஈடுசெய்ய, இந்த கட்டமைப்பு பகுதிகளுக்கு இதுவரை அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போதுள்ள பொது நிதியுதவி பெறும் சுங்கச்சாவடிகளுக்கு, அடுத்த பயனர் கட்டண திருத்த தேதியிலிருந்து புதிய விதி அமலுக்கு வரும். புதிய சுங்கச்சாவடிகள் செயல்படத் தொடங்கும் தேதியிலிருந்து புதிய விதி பொருந்தும். சலுகையாளரால் இயக்கப்படும் சுங்கச்சாவடிகளுக்கு, சலுகை ஒப்பந்தங்கள் காலாவதியான பிறகு இது நடைமுறைக்கு வரும்.

அதிகாரிகள் கூற்றுப்படி, இந்த புதிய விதி வணிக வாகனங்களுக்கு பெரிதும் பயனளிக்கும். ஏனெனில் அவை தனியார் வாகன உரிமையாளர்களை விட நான்கு முதல் ஐந்து மடங்கு அதிக கட்டணம் செலுத்துகின்றன. தனியார் வாகன உரிமையாளர்கள் ரூ. 3,000 செலவில் ஆண்டு பாஸ் வாங்கும் வசதியையும் கொண்டுள்ளனர்.