தொடர் புகார்: தஞ்சை தி.மு.க எம்.பி கட்சி பதவியில் இருந்து நீக்கம்

தொடர் புகார்: தஞ்சை தி.மு.க எம்.பி கட்சி பதவியில் இருந்து நீக்கம்
தி.மு.க தலைமைக்கு புகார்கள் குவிந்த நிலையில், தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து கல்யாணசுந்தரம் நீக்கப்பட்டுள்ளார்

தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து கல்யாணசுந்தரம் நீக்கப்படுவதாகவும், தஞ்சை வடக்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளராக சாக்கோட்டை அன்பழகன் எம்எல்ஏ நியமனம் செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் வடக்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளராகவும், மாநிலங்களவை உறுப்பினராகவும் செயல்பட்டு வந்தார் எஸ். கல்யாணசுந்தரம். 

 கல்யாணசுந்தரம் 

இவர் 2022-ம் ஆண்டு தி.மு.க சார்பில் மாநிலங்களவைத் தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர். ஏற்கனவே இவர் மீது பல குற்றச்சாட்டுகள் உள்ளன. கும்பகோணத்தில் நடந்த ஒரு செய்தியாளர் சந்திப்பில், கல்யாணசுந்தரம் முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட கேள்விகளை மட்டுமே பத்திரிகையாளர்கள் கேட்க வேண்டும் என்று கூறியதாக புகார் எழுந்தது. அது மட்டும் இல்லாமல் ஏற்கனவே சர்ச்சை பேச்சு தொடர்பாக பொன்முடி வழக்கை சந்தித்துள்ள நிலையில் கல்யாணசுந்தரமும் சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தது அதிருப்தியை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில், தி.மு.க நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கல்யாணசுந்தரம், எல்லாமே உடனே கிடைத்து விடாது திருமணமானால் கூட பத்து மாதத்திற்கு பிறகு தான் குழந்தை பிறக்கும் என கூறினார்.

திருமணத்திற்கு முன்போ அல்லது திருமணம் நடக்கின்ற அன்றோ குழந்தை பிறக்க வேண்டும் என்றால் அது வேறு விதமாக தான் பிறக்கும் என்று பேசியது சர்ச்சையை கிளப்பியது. முன்கூட்டியே காதல் செய்து கர்ப்பமானால் திருமணம் ஆகும் அன்றே குழந்தை பிறக்கும் அதனால் வருபவர்களிடம் ஆத்திரப்பட்டு பேசுவதால் கோபப்பட்டு பேசுவதால் திட்டி பேசுவதால் நல்ல விஷயங்கள் செய்ய வருபவர்களுக்கு ஆர்வம் குறைந்துவிடும் என்றார்.

வேலையெல்லாம் செய்து கொடுங்கள் என்று கேட்க வேண்டும் தவிர விதண்டாவாதமாக பேசக்கூடாது என்றும் உங்களுக்கெல்லாம் வீடு கட்டி தர வேண்டும் என்பது சட்டம் இல்லை உங்களுக்கு உதவ வந்திருக்கிறோம் என்றும் கல்யாணசுந்தரம் பேசி இருந்தது முகம் சுழிக்க வைத்தது.இதுபோல சர்ச்சை பேச்சுக்களும் முறைகேடு புகார்களும் அவரது பதவி பறிபோக காரணமாயிற்று. அது மட்டுமல்லாது கல்யாணசுந்தரத்தின் மீதும் அவரது மகன் மீதும் பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக தி.மு.க தலைமைக்கு புகார்கள் குவிந்த நிலையில், தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து கல்யாணசுந்தரம் நீக்கப்பட்டுள்ளார்.

 சாக்கோட்டை அன்பழகன் 

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை துரைமுருகன் வெளியிட்டுள்ளார். இந்த நிலையில் தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து கல்யாணசுந்தரம் நீக்கப்படுவதாகவும், தஞ்சை வடக்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளராக சாக்கோட்டை அன்பழகன் எம்எல்ஏ நியமனம் செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.