இலங்கையில் கால் பதித்த ஸ்டார்லிங்க் : செயற்கைக் கோள் இணைய சேவை இந்தியாவில் எந்த அளவுக்கு சாத்தியம்?

இலங்கையில் கால் பதித்த ஸ்டார்லிங்க் : செயற்கைக் கோள் இணைய சேவை இந்தியாவில் எந்த அளவுக்கு சாத்தியம்?
ஸ்டார்லிங்க் என்பது பூமியின் கீழ் சுற்றுப்பாதையில் இயங்கும் செயற்கைக்கோள் இணைய சேவை.

ஸ்பேஸ்எக்ஸின் செயற்கைக்கோள் இணைய சேவையான ஸ்டார்லிங்க், இலங்கையில் கால் பதித்தவுடன், தற்போது மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.

பூட்டான் மற்றும் வங்கதேசத்துக்குப் பிறகு, தெற்காசியாவில் ஸ்டார்லிங்க் இணையம் தொடங்கப்பட்ட மூன்றாவது நாடாக இலங்கை உள்ளது.

ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஈலோன் மஸ்க் தனது சமூக ஊடக தளமான எக்ஸில் ஸ்டார்லிங்க் இலங்கையில் கால் பதிப்பதை அறிவித்தார்.

ஸ்டார்லிங்க் விரைவில் இந்தியாவிற்கும் வரவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன

.ஸ்டார்லிங்க் தனது சேவைகளை இங்கு தொடங்க இந்திய தொலைத்தொடர்புத் துறையிடமிருந்து ஒப்புதல் பெற்றுள்ளதாக, செய்தி நிறுவனமான பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.

சில காலத்திற்கு முன்பு, ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ போன்ற பெரிய இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்களும் ஸ்டார்லிங்க் தொடர்பாக ஸ்பேஸ்எக்ஸுடன் ஒரு ஒப்பந்தத்தை அறிவித்தன.

தொலைதூரப் பகுதிகளிலும் அதிவேக இணையத்தை வழங்குவதற்காக, புவி வட்டபாதையின் குறைந்த உயரத்தில் (LEO) வடிவமைக்கப்பட்ட செயற்கைக்கோள் இணைய சேவை தான் ஸ்டார்லிங்க் .

ஆனால் நமக்குப் பழக்கமான தொலை தொடர்பு பிராட்பேண்ட் நெட்வொர்க்குகளிலிருந்து இது எவ்வாறு வேறுபடுகிறது, இந்தியாவிற்கு வருவதால் பயனர்களுக்கு கிடைக்கும் நன்மை என்ன?

ஸ்டார்லிங்க் என்றால் என்ன?

ஈலோன் மஸ்க்கின் நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் பல ஆண்டுகளாக இந்தியாவில் ஸ்டார்லிங்க் இணைய சேவையைத் தொடங்க முயற்சித்து வருகிறது.

ஸ்டார்லிங்க் என்பது இணைய சேவையை வழங்கும் செயற்கைக்கோள்களின் வலையமைப்பு. இந்த சேவை ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தால் தொடங்கப்பட்டது.

அதன் வலைத்தளத்தின்படி , "ஸ்டார்லிங்க் என்பது உலகின் முதல் மற்றும் மிகப்பெரிய செயற்கைக்கோள் விண்மீன் தொகுப்பு.

இது ஸ்ட்ரீமிங், ஆன்லைன் கேமிங், வீடியோ அழைப்புகள் மற்றும் பலவற்றைச் செய்யக்கூடிய பிராட்பேண்ட் இணைய சேவையை வழங்க, புவி வட்டபாதையின் குறைந்த உயரத்தைப் பயன்படுத்துகிறது" என தெரியவருகிறது.

இந்த சேவை 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

தற்போது, ​​இந்த தொலைத்தொடர்பு திட்டத்தின் கீழ், சுமார் 8 ஆயிரம் சிறிய செயற்கைக்கோள்கள் பூமியின் 'கீழ் சுற்றுப்பாதையில்' உள்ளன.

இந்த செயற்கைக்கோள்கள் பொதுவாக பூமியின் மேற்பரப்பிலிருந்து 200-2000 கிலோமீட்டர் உயரத்தில் சுற்றுகின்றன.

2024 ஆம் ஆண்டின் இறுதியில், ஸ்டார்லிங்கில் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் 4.6 மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் இருந்தனர்.

யூடெல்சாட் ஒன்வெப் மற்றும் ஜியோ சேட்டிலைட் கம்யூனிகேஷன்ஸுக்குப் பிறகு இந்தியாவில் செயற்கைக்கோள் இணைய சேவையை வழங்க தொலைத்தொடர்புத் துறையிடமிருந்து உரிமம் பெற்ற மூன்றாவது நிறுவனமாக ஸ்டார்லிங்க் உள்ளது.

ஸ்டார்லிங்க் இந்தியாவிற்கு வந்தால் என்ன நடக்கும்?

இந்த ஆண்டு மார்ச் மாதத்தில், இந்தியாவின் இரண்டு பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ஆகியவை ஸ்டார்லிங்குடன் தனித்தனி ஒப்பந்தங்களைச் செய்தன.

ஆனால், ஸ்டார்லிங்கின் உபகரணங்களை இந்திய சந்தையில் கிடைக்கச் செய்வது தொடர்பானவை தான் இந்த ஒப்பந்தங்கள்.

இந்திய இணையம் மற்றும் மொபைல் சங்கம் , சந்தைப்படுத்தல் தரவு மற்றும் பகுப்பாய்வு நிறுவனமான காந்தர் உடன் இணைந்து ஒரு அறிக்கையை வெளியிட்டது .

இதன்படி, 2025 ஆம் ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் இணையத்தைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 90 கோடியைத் தாண்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் 2021 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் தனது செயற்கைக்கோள் இணைய சேவையைத் தொடங்க முயற்சித்து வருகிறது, ஆனால் இன்னும் அதற்கு அனுமதி கிடைக்கவில்லை.

இந்தியாவைப் பொறுத்தவரை, அது மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மற்றும் இந்திய பயனர்கள் மீது என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.

தற்போது, இணையத்தை ஃபைபர் ஆப்டிக் கேபிள்கள், டிஜிட்டல் சந்தாதாரர் இணைப்புகள் (DSL), அல்லது செல்லுலார் கோபுரங்கள் மூலம் இந்திய பயனர்கள் பயன்படுத்துகிறார்கள்.

மாறாக, ஸ்டார்லிங் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தின் மூலம் செயல்படுகிறது. இதன் மூலம், பிராட்பேண்ட் உள்கட்டமைப்பு இல்லாத தொலைதூர மற்றும் மலையிலுள்ள பகுதிகளிலும் அதிவேக இணையத்தை வழங்க முடியும் என்று பல்லவ் பாக்லா பதில் கூறுகிறார்.

"4ஜி மற்றும் 5ஜி கோபுரங்கள் இல்லாத தொலைதூரப் பகுதிகளில், அவற்றை நிறுவ முடியாத இடங்களில், ஃபைபர் ஆப்டிக் கேபிள்களை அமைக்க முடியாத இடங்களில், இந்த செயற்கைக்கோள் அடிப்படையிலான சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்" என்றும் அவர் குறிப்பிடுகிறார் .

தொலைதூரங்களில் உள்ள முகாம்களிலும் இணைய இணைப்பு கிடைக்கும் என்பதால், இது நமது ராணுவத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று அவர் கூறுகிறார். இருப்பினும், அவரது பார்வையில், ஸ்டார்லிங், ஃபைபர் ஆப்டிக் இணையத்தைவிட மேம்பட்ட வேகத்தை வழங்க முடியாது. மேலும், இதன் விலை அதிகமாக இருக்கும். அதனால், இது சாதாரண மக்களிடையே பிரபலமடைய வாய்ப்பு குறைவாகவே உள்ளது.

"இந்தியாவில் இணையம் மிகவும் மலிவானது. தொலைதூரப் பகுதிகளில் வேலை செய்ய வேண்டிய ராணுவம், கடற்படை, தொழில்துறை போன்றவற்றில் ஸ்டார்லிங்கின் சேவைகள் அதிகமாகப் பயன்படுத்தப்படும் என்று நான் நினைக்கிறேன். இது ஒரு விலையுயர்ந்த சேவை, எனவே ஏற்கனவே உள்ள நிறுவனங்கள் வழங்கும் இணைய சேவையில் இது குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தாது" என்று பல்லவ் பாக்லா கூறுகிறார்.