பாடல்கள் காப்புரிமை விவகாரத்தில் இளையராஜா மனு தள்ளுபடி.. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

பாடல்கள் காப்புரிமை விவகாரத்தில் இளையராஜா மனு தள்ளுபடி.. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!
பாடல்கள் காப்புரிமை விவகாரத்தில் இசையமைப்பாளர் இளையராஜா தாக்கல்

டெல்லி: பாடல்கள் காப்புரிமை விவகாரத்தில் இசையமைப்பாளர் இளையராஜா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு, இளையராஜாவின் மனுவைத் தள்ளுபடி செய்துள்ளது.

சோனி நிறுவனம் தொடர்ந்த காப்புரிமை தொடர்பான வழக்கை மும்பை உயர்நீதிமன்றத்திலிருந்து சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரிய இளையராஜாவின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

இசையமைப்பாளர் இளையராஜாவின் மியூசிக் & மேனேஜ்மென்ட் பிரைவேட் லிமிடெட் (IMMP) நிறுவனத்திடம் இருந்து ஒன்றரை கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு சோனி மியூசிக் நிறுவனம் கடந்த 2022 ஆம் ஆண்டு மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

டிசம்பர் 2021ல், எக்கோ ரெக்கார்டிங் கம்பெனி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திடமிருந்து பதிப்புரிமை உரிமையைப் பெற்ற சில பாடல்கள், யூடியூபில் பதிவேற்றப்பட்டு, IMMP நிறுவனத்தால் பொதுமக்களுக்கு ஒளிபரப்பப்படுவதை சோனி நிறுவனம் உறுதி செய்தது.

சோனி மியூசிக் நிறுவனத்திற்கு சொந்தமான 536 ஆல்பங்களில், 228 ஆல்பங்கள் பொதுமக்களுக்குக் கிடைத்ததாகவும், இதன் மூலம் சோனியின் பதிப்புரிமை மீறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தது. ஆனால், ஒளிபரப்பப்பட்ட படைப்புகளின் உரிமை தங்களுக்குத்தான் இருப்பதாக இளையராஜா மியூசிக் என்டர்டெயின்மென்ட் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தெரிவித்ததுடன், ஒளிபரப்பையும் தொடர்ந்து மேற்கொண்டது..

இதையடுத்து, பதிப்புரிமையை மீறியதற்கான இழப்பீடு கோரி, இளையராஜாவின் IMMP நிறுவனத்திற்கு எதிராக சோனி மியூசிக் நிறுவனம் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. 1.5 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கோரி கடந்த 2022 ஆம் ஆண்டு சோனி மியூசிக் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தது.இந்த மனு மீதான விசாரணை மும்பை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது..

இந்நிலையில் சோனி நிறுவனத்துக்கு எதிராக தாம் தாக்கல் செய்த காப்புரிமை தொடர்பான மனுக்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளதாகவும், மும்பை உயர்நீதிமன்றத்தில் உள்ள மனுவையும் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என்றும் கோரி இளையராஜா தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

சென்னையில் பாடல் காப்புரிமை தொடர்பாக வழக்கு விசாரணையில் இருக்கும் நிலையில், ஒரே தன்மை கொண்ட வழக்குகள் இரு நீதிமன்றங்களில் நடப்பது முரண்பாடான தீர்ப்புக்கு வழிவகுக்கும் என இளையராஜா அந்த மனுவில் தெரிவித்திருந்தார். இந்த மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு தற்போது தள்ளுபடி செய்துள்ளது.