ரொம்ப கஷ்டம்.. TNPSC குரூப் 4 குளறுபடி! தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும்! பறந்த கோரிக்கை

சென்னை: தமிழ்நாடு அரசு பாணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு குரூப் 4 தேர்வுகள் நடத்தப்பட்டது. இந்த நிலையில் சேலத்திலிருந்து விடைத்தாள் கொண்டு செல்லப்பட்டபோது உரிய பாதுகாப்பு இல்லாமல் கொண்டு செல்லப்பட்டதாக புகார் எழுந்த நிலையில் அதற்கு டிஎன்பிஎஸ்சி மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் குளறுபடிகளின் உச்சமாக இருக்கும் குரூப் 4 தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் எனவும், மறுதேர்வு நடத்தப்பட வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளரும் தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்...
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மற்றும் இளநிலை உதவியாளர் உள்ளிட்ட காலி பணியிடங்களை நிரப்ப கடந்த 12ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் குரூப் 4 தேர்வுகளை நடத்தியது. 3900 பணியிடங்களுக்கு சுமார் 19 லட்சம் பேர் விண்ணப்பித்த நிலையில் 11,48,000 பேர் தேர்வு எழுதினார்...
தேர்வுக்கான விடைக்குறிப்பு தற்போது வெளியாகியிருக்கும் நிலையில் புதிய சர்ச்சை வெடித்திருக்கிறது. சேலம் மாவட்டத்தில் இருந்து அனுப்பப்பட்ட குரூப்-4 தேர்வு விடைத்தாள்கள் உரிய முறையில் பாதுகாப்பில்லாத வகையில் கொண்டு செல்லப்பட்டதாகவும் அட்டைப்பெட்டியில் ஆங்காங்கே கிழிக்கப்பட்டு,.
அதுமட்டுமல்லாமல் விடைத்தாள்கள் திருத்தப்பட்டதாகவும் சர்ச்சை வெடித்திருக்கிறது. இதனால் முறைகேடுகள் நடந்திருப்பதாக தேர்வர்களால்குற்றம் சாட்டப்படும் நிலையில் டிஎன்பிஎஸ்சி அதற்கு மறுப்பு தெரிவித்து இருக்கிறது. "விடைத்தாள்கள் ட்ரங்க் பெட்டியில் மட்டுமே கொண்டு செல்லப்படும். சாதாரண அட்டைப் பெட்டிகளில் கொண்டு செல்லப்படாது விடைத்தாள் தவிர்த்த மற்ற ஆவணங்கள் மட்டுமே அட்டைப்பெட்டியில் அனுப்பப்படும். அந்த ஆவணங்கள் பிரிக்கப்பட்டது எங்கே? என விசாரணை நடைபெற்று வருவதாக" டிஎன்பிஎஸ்சி கூறியுள்ளது...
இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி தேர்வு குரூப் 4 தேர்வு ரத்து செய்ய வேண்டும் எனவும் மறுதேர்வு நடத்த வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் கடந்த 12.07.2025 அன்று நடைபெற்ற குரூப்-4 தேர்வு ஆரம்பிக்கும் முன்னரே, மதுரையில் வினாத்தாள் ஒரு தனியார் ஆம்னி பேருந்தில், முறையாக சீலிடப்படாமல், கதவின் மேல் ஒரு A4 ஷீட் ஒட்டப்பட்ட நிலையில் அனுப்பப்பட்டது சர்ச்சையானது.
பிறகு, தேர்வு வினாத்தாளில் பல கேள்விகள், குறிப்பாக தமிழ்ப் பாடக் கேள்விகள், Syllabus-க்கு அப்பாற்பட்டு இருந்ததாக பல்வேறு தேர்வர்கள் புகார் தெரிவித்தனர். இந்நிலையில், தற்போது, சேலத்தில் இருந்து சென்னைக்கு அனுப்பப்பட்ட விடைத்தாள்கள் அடங்கிய பெட்டிகள் முறையாக சீலிடப்படாமல், ஆங்காங்கே உடைக்கப்பட்டு இருப்பதாக செய்திகள் வருகின்றன. குரூப்-4 பதவிகள், குறிப்பாக VAO பதவி என்பது தமிழ்நாடு அரசின் வேர் போன்றது...
ஜாதி மத பேதமின்றி, ஏழை எளிய பின்னணி கொண்ட மக்கள் அரசு அதிகாரிகள் ஆகவேண்டும் என்ற உயரிய எண்ணத்தில் மாண்புமிகு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களால் உருவாக்கப்பட்ட பதவி. பல லட்சம் மாணவர்களின் கனவாக இருக்கக் கூடிய குரூப்-4 தேர்வு என்பது, எவ்வளவு முறையாக நடத்தப்பட வேண்டியது? ஆனால், இந்த ஸ்டாலின் மாடல் அரசோ, மெத்தனப் போக்கின் உச்சத்தில் இந்த தேர்வை நடத்தி, தேர்வர்களின் வாழ்க்கையோடு விளையாடியுள்ளது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
ஜூலை 12 அன்று நடைபெற்ற குரூப்-4 தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும்; உடனடியாக மறு தேர்வு வைக்க வேண்டும் எனவும், குரூப்-4 குளறுபடிகள் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை மேற்கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்." என கூறியுள்ளார்.