கோவையில் 4.5 கோடி சம்பாத்தியம்.. சில நிமிடங்களில் வெளிநாடு போக வேண்டியவர்.. ஏர்போர்ட்டில் ட்விஸ்ட்

கோவை: கோவை மில் அதிபரை ஏமாற்றி 4 கோடி சம்பாதித்துவிட்டு, அடுத்த ஒரு மணி நேரத்தில் வெளிநாட்டுக்கு பறக்க இருந்த மும்பை தொழில் அதிபர் வசமாக சிக்கியுள்ளார். துணிகளை வாங்கி விற்கும் தொழில் செய்து வரும் மும்பை தொழில் அதிபர் பரத் குமார் மாண்டிட், கோவை மில் அதிபரிடம் சக்திவேல் மூலம் கோடிகளில் சம்பாதித்துவிட்டு எஸ்கேப் ஆக இருந்தார். ஆனால் அவரது கெட்ட நேரம் ஏர்போர்டில் காத்திருந்தது. இதனால் அவர் சிக்கியுள்ளார்.
கோவை மாவட்டம் அன்னூர் அருகே பிள்ளையப்பம் பாளையத்தை சேர்ந்த சக்திவேல் என்பவர் மில் ஒன்றை நடத்தி வருகிறார். ஜவுளி தொழில் அதிபரான சக்திவேல், தனது தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் ஜவுளி துணிகளை மும்பையை சேர்ந்த பரத் குமார் மாண்டிட் (வயது 42) என்பவருக்கு தந்துள்ளார். கடந்த கடந்த 2022-ம் ஆண்டு ரூ.6 கோடிக்கு பரத் குமார் மாண்டிட் கோவை தொழில் அதிபர் சக்திவேலிடம் துணிகளை கொள்முதல் செய்தார்.
4.5 கோடி மோசடி
அந்த துணிகள் கன்டெய்னர் மூலம் சக்திவேல் லாரியில் அனுப்பி வைத்துள்ளார். அதை பெற்றுக்கொண்ட பரத்குமார் மாண்டிட் அதற்கான பணத்தை அனுப்பி வைப்பதாக கூறினார்.அதில் அவர் ரூ.1.50 கோடியை மட்டும் கொடுத்து உள்ளார். மீதமுள்ள ரூ.4.5 கோடியை கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.
தலைமறைவு
இது தொடர்பாக சக்திவேல் மற்றும் மில் நிர்வாகிகள் கேட்ட போது அவர் சரியான பதில் அளிக்க வில்லை என கூறப்படுகிறது. இது குறித்து சக்திவேல் கோவை மாவட்ட காவலதுறையிடம் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். போலீஸ் தேடுவதை அறிந்த பரத்குமார் மாண்டிட் தலைமறைவானார். இதையடுத்து பரத்குமாரை பிடிக்க, கோவை மாநகர குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் செல்வம், சப்- இன்ஸ்பெக்டர் நாகராஜ், போலீஸ்காரர் ரமேஷ் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
வெளிநாடுக்கு தப்பி ஓட முயற்சி
அத்துடன் தொழில் அதிபர் பரத்குமார் வெளிநாடுகளுக்கு தப்பி ஓடுவதை தடுக்க நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களுக்கு லுக்-அவுட் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில், பரத்குமார் மாண்டிட் வெளிநாடு தப்பிச்செல்ல மும்பை விமான நிலையத்துக்கு சென்று உள்ளார். அடுத்த சில நிமிடங்களில் வெளிநாட்டுக்கு தப்பி ஓட முயன்ற நிலையில், அவருக்கு கெட்ட நேரம் அங்கு காத்திருந்தது. லுக்-அவுட் நோட்டீஸ் கண்காணித்த விமான நிலைய போலீசார் பரத்குமார் மாண்டிட்டை பிடித்து வைத்து, கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசுக்கு பாராட்டு
இதையடுத்து கோவை குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையிலான தனிப்படையினர் மும்பை சென்று பரத்குமார் மாண்டிட்டை கைது செய்து கோவை அழைத்து வந்தனர். பின்னர் அவரை கோவை 6-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். ரூ.4½ கோடி மோசடி வழக்கில் தலைமறைவான நபரை கைது செய்த இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையிலான தனிப்படையினரை கோவை மாவட்ட எஸ்பி கார்த்திகேயன் மற்றும் உயர் அதிகாரிகள் பாராட்டினார்கள்..