மைசூரு சாண்டல் சோப்பு விளம்பரத்துக்கு தமன்னா! சர்ச்சையால் நடந்த சாதனை

மைசூரு சாண்டல் சோப்பு விளம்பரத்துக்கு தமன்னா! சர்ச்சையால் நடந்த சாதனை
மைசூரு சாண்டல் சோப்பு விளம்பரத்துக்கு தமன்னா நியமிக்கப்பட்டதற்கு எதிராக எழுந்த சர்ச்சையால் நடந்த சாதனை

கர்நாடகத்தின் அரசுத் துறையான மைசூரு சாண்டல் சோப்பு நிறுவனத்தின் விளம்பரத் தூதராக நடிகை தமன்னா நியமிக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், அந்த நிறுவனம் விற்பனையில் புதிய சாதனை படைத்துள்ளது.

கடந்த மே மாதத்தில் மட்டும் இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.186 கோடிக்கு சோப்பு விற்பனையாகி சாதனை படைக்கப்பட்டுள்ளது. இது ரூ.150 கோடி என்ற இலக்கைக் காட்டிலும் 24 சதவீத உயர்வாகும்.

மைசூரு சாண்டல் சோப்புக்கு, நடிகை தமன்னாவை விளம்பரத் தூதராக கர்நாடகா சோப்பு நிறுவனமான கர்நாடக அரசுத் துறை நிறுவனம் நியமனம் செய்தது. கடந்த 109 ஆண்டுகளாக மைசூரு சாண்டல் சோப்பு உற்பத்தியை மேற்கொண்டு வரும் இந்த நிறுவனம், அண்மையில் தமன்னாவை நியமித்தற்கு எதிராக எழுந்த சர்ச்சைகளுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளது.

கடந்த ஒரு சில ஆண்டுகளாகவே, மைசூரு சாண்டல் சோப்பு நிறுவனமானது, வருவாயில் புதிய சாதனைகளை படைத்து வருகிறது. ஆண்டு நிகர வருவாய் ரூ.113 ஆக இருந்த நிலையில், இது அண்மைக் காலமாக நான்கு மடங்காக அதாவது ரூ.415 கோடியாக அதிகரித்துள்ளது.

கர்நாடகத்தில் உற்பத்தி செய்யப்படும் மைசூரு சாண்டல் சோப்பு, தென்னிந்தியாவில் பெருமளவில் விற்பனையாகும் சோப்பாக உள்ளது. இதன் முக்கிய சந்தையாக ஆந்திரம் விளங்குகிறது. இந்த நிலையில்தான், கர்நாடக சோப்புக்கு, தமன்னாவை ஏன் விளம்பரத் தூதராக நியமிக்க வேண்டும் என்று கேட்டு மாநிலத்தில் சர்ச்சை வெடித்தது.

இந்த சர்ச்சையைத் தொடர்ந்து மே மாதத்தில் விற்பனை அதிகரித்திருப்பதால், நிறுவனமானது, சர்ச்சைக்கு நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளது.