அரசு கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு அரசு வெளியிட்ட சர்பிரைஸ் குட் நியூஸ்..!!

Tamilnadu Government : உயர்கல்வியில் அரசுக் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்காக தமிழ்நாடு உயர்கல்வித்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. முதுநிலை படிப்புகளில் மாணவ, மாணவிகள் சேருவதற்கான காலவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுநிலைப் பாடப்பிரிவுகளின் மாணாக்கர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு 31.07.2025 வரை நீட்டிக்கப்படுவதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் அறிவித்துள்ளார்.
இது குறித்து உயர்கல்வித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளதாவது: 20.06.2025 அன்று சென்னை, இராணி மேரி கல்லூரியில் 2025-26ஆம் ஆண்டிற்கான அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுநிலைப் பாடப்பிரிவுகளின் மாணாக்கர்களின் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு தொடங்கி வைக்கப்பட்டது. மாணாக்கர்கள் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பித்து வருகின்றனர். இன்றுடன் (15.07.2025) அதன் கால
அவகாசம் முடிவடைவதாக இருந்தது.
ஆனால், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, மாணாக்கர்கள் நலன் கருதி இந்த விண்ணப்பப் பதிவினை 31.07.2025 வரை நீட்டிக்கப்படுகிறது.
மேலும், 04.08.2025 அன்று மாணாக்கர்களின் தரவரிசைப் பட்டியல் கல்லூரிகளுக்கு அனுப்பப்படும். சிறப்பு ஒதுக்கீடு மாணாக்கர்களுக்கான கலந்தாய்வு 11.08.2025 அன்று நடைபெறும். பின்னர் பொது கலந்தாய்வு 13.08.2025 அன்று முதல் தொடங்கி மாணாக்கர்கள் சேர்க்கை நடைபெறும். முதலாம் ஆண்டு முதுநிலை மாணாக்கர்களுக்கு வகுப்புகள் 20.08.2025 அன்று தொடங்கும். மாணாக்கர்கள் இந்த கால நீட்டிப்பினை பயன்படுத்தி தாங்கள் விரும்பும் பாடப்பிரிவுகளை மேற்குறிப்பிட்டுள்ள இணையதளத்தில் விண்ணப்பித்து முதுநிலை பட்டப்படிப்பில் சேர்க்கை பெற்று பயன்பெருமாறு கேட்டுக் கொள்கிறேன் என அமைச்சர் கோவி செழியன் கூறியுள்ளார்.
எனவே, டிகிரி படிப்பில் அரியர் எக்ஸாம் எழுதி முடிவுகளுக்காக காத்திருந்த மாணவர்களுக்கு இந்த கால நீட்டிப்பு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. பட்டப்படிப்பில் கடைசி செமஸ்டர் தேர்வில் ஏதேனும் ஒருசில பாடங்களில் தேர்ச்சி பெறாவர்கள் அரியர் எக்ஸாம் எழுதியிருப்பார்கள். அவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியான பிறகே முதுநிலை படிப்புக்கு விண்ணப்பிக்க முடியும். அதனால், அரசு இதனையும் கருத்தில் கொண்டு இந்த காலநீட்டிப்பை வழங்கியிருக்கிறது. எனவே, முதுநிலை படிப்பை அரசு கலைக்கல்லூரிகளில் படிக்க விரும்பும் மாணவ, மாணவிகளுக்கு அரசு கொடுத்திருக்கும் இன்னொரு வாய்ப்பு ஆகும்.