ஹிட்லரிடம் இருந்து யூத குடும்பங்களை காப்பாற்றிய இந்தியர் - கதைகளை விஞ்சிய சாகச வரலாறு..

உனக்கு நான் ஒரு ரகசியம் சொல்கிறேன். நாஜிக்களிடமிருந்து தப்பிக்க யூத குடும்பங்களுக்கு உன்னுடைய நானா (தாத்தா) உதவியுள்ளார்."
தன் தாய் கூறிய இந்த ஒற்றை வாக்கியம் தான் தன்னுடைய தாத்தாவின் கடந்த காலத்திற்கு வினய் குப்தாவை பயணிக்க வைத்தது. அவர் அதில் கண்டுபிடித்தது, ஒரு புனைவை விட சுவாரஸ்யத்தைத் தரக்கூடியது. ஐரோப்பாவின் இருண்ட காலகட்டத்தில் முன்பின் அறியாதவர்களை காப்பாற்றுவதற்காக எல்லா ஆபத்துகளுக்கும் துணிந்த ஒரு இந்திய தொழிலதிபரின் அதிகம் அறியப்படாத சாகசங்கள் நிறைந்த கதை இது.
அவர்களை காப்பாற்றுவதற்கு இரக்கம் மட்டும் போதுமானதாக இருக்கவில்லை; மாறாக இந்த பயணம், போக்குவரத்து சவால்கள், ஆபத்துகள் மற்றும் உறுதிப்பாடு நிறைந்ததாக இருந்தது. மறுபுறம் இந்தியாவில் யூதர்களை பணியமர்த்தும் வகையில் நிறுவனங்களையும் அவர்கள் வசிப்பதற்காக வீடுகளையும் உருவாக்கினார் குந்தன்லால். ஆனால், இரண்டாம் உலகப் போர் தொடங்கிய போது யூதர்களை "எதிரி நாட்டவர்கள்" என பிரிட்டிஷ் அறிவித்தது.
குந்தன்லாலின் வாழ்க்கை ஒரு காவியம் போன்றது: லூதியானாவை சேர்ந்த ஏழை சிறுவனாக 13 வயதில் திருமணமாகி, மரக்கட்டைகள், உப்பு முதல் ஆய்வு உபகரணங்கள் மற்றும் மாட்டு வண்டி சக்கரங்கள் வரை எல்லாவற்றையும் விற்றவர் குந்தன்லால். ஆடை தொழில் மற்றும் தீப்பெட்டி தொழிற்சாலையையும் அவர் நடத்தியுள்ளார். லாகூரில் படிப்பில் முன்னிலையில் இருந்த அவர், 22 வயதில் காலனியாதிக்கத்தின் கீழ் குடிமைப் பணிகளில் இணைந்தார். ஆனால், சுதந்திரப் போராட்டத்தில் இணைவதற்காக, அப்பணியிலிருந்து ராஜினாமா செய்தார், அதன்பின் பல தொழிற்சாலைகளை உருவாக்கினார்...
இந்திய சுதந்திர போராட்ட தலைவரும் பின்னர் இந்தியாவின் முதல் பிரதமராகவும் இருந்த ஜவஹர்லால் நேருவை அவர் சந்தித்துள்ளார். ஐரோப்பாவுக்கு செல்லும் நீராவிக் கப்பல் ஒன்றில் நடிகை தேவிகா ராணியையும் சந்தித்துள்ளார்...
ரெஸ்க்யூ இன் வியன்னா எனும் தன்னுடைய குடும்ப நினைவு குறிப்பு புத்தகத்தில், தன்னுடைய தாத்தா வெளிநாட்டில் எப்படி அசாத்தியமான பணிகளை செய்துள்ளார் என்பதை வினய் குப்தா வெளிப்படுத்தியுள்ளார். தன் குடும்பத்தின் கடிதங்கள், தப்பித்தவர்களின் நேர்காணல்கள் மற்றும் வரலாற்று ஆவணங்களை அவர் இதில் தொகுத்துள்ளார்.
வேலை, வாழ்வாதாரத்தை வழங்கிய குந்தன்லால்
1938-ம் ஆண்டில் ஹிட்லர் ஆஸ்திரியாவை ஜெர்மனியுடன் இணைத்த சமயத்தில், பஞ்சாபின் லூதியானாவை சேர்ந்த இயந்திர கருவிகளை உற்பத்தி செய்பவரான குந்தன்லால், அமைதியாக யூதர்கள் தப்பிப்பதற்கான விசாக்கள் கிடைப்பதற்காக அவர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கினார். வேலைவாய்ப்பு, வாழ்வாதாரத்தை வழங்கி, இந்தியாவில் அந்த குடும்பங்களுக்கு வீடுகளையும் அமைத்துக் கொடுத்தார்.
ஐந்து குடும்பங்களை காப்பாற்றினார் குந்தன்லால்...
வயதான யூத வழக்கறிஞர் ஃபிரிட்ஸ் வெய்ஸ், உடல்நிலை சரியில்லாதது போல் நடித்து மருத்துவமனையில் ஒளிந்துகொண்டிருந்தார். குந்தன்லாலும் அதே மருத்துவமனையில் உடல்நல பிரச்னைக்காக சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்தார்.
தன்னுடைய சொந்த வீட்டுக்கு வெளியே உள்ள தெருக்களை சுத்தம் செய்யுமாறு வெய்ஸ்-ஐ நாஜிக்கள் கட்டாயப்படுத்தியபோது, குந்தன்லால் அவருக்கு தப்பிப்பதற்கான ஒரு வழியை வழங்கினார்: போலியான "குந்தன் ஏஜென்சிஸ்" எனும் நிறுவனத்தில் அவருக்கு வேலை வழங்கினார். அதன்மூலம் வெய்ஸுக்கு இந்தியாவுக்கு செல்வதற்கான விசா கிடைத்தது.
மரப்பொருட்களை தயாரிக்கும் ஆல்ஃப்ரெட் வெக்ஸ்லர் என்பவர், தன்னுடைய கர்ப்பிணி மனைவியை பரிசோதனைகளுக்காக மருத்துவமனைக்கு அழைத்து வந்தபோது, குந்தன்லாலை சந்தித்தார். மரச்சாமான் நிறுவனத்தில் அவருக்கு வேலையையும் வழங்கி, இந்தியாவில் குடியேறுவதற்கு உதவுவதாகவும் குந்தன்லால் உறுதியளித்தார். அதன்மூலமாக, 1938ம் ஆண்டு ஜனவரி முதல் 1939ம் ஆண்டு பிப்ரவரி வரை இந்தியாவை அடைந்த யூத குடும்பங்களுள் வெக்ஸ்லரின் குடும்பமும் இணைந்தது.
ஜவுளி துறையில் தொழில்நுட்ப பணியாளரான ஹன்ஸ் லாஷ், ஆஸ்திரிய செய்தித்தாள் ஒன்றில் திறன் வாய்ந்த பணியாளர்களுக்காக குந்தன்லால் அளித்த விளம்பரத்துக்கு விருப்பம் தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து, கற்பனையான "குந்தன் க்ளாத் மில்ஸ்" எனும் நிறுவனத்தில் மேலாளர் பொறுப்பையும் அத்துடன் வீடு, லாபத்தில் பங்கு மற்றும் பாதுகாப்பான பயணம் ஆகியவற்றையும் அவருக்கு வழங்கினார் குந்தன்லால். அதன்மூலம் மீண்டும் வாழ்க்கையை தொடங்குவதற்கான வாய்ப்பு லாஷுக்கு கிடைத்தது..
முன்பு 50 பணியாளர்கள் அடங்கிய பிளைவுட் தொழிற்சாலைக்கு உரிமையாளராக இருந்த ஆல்ஃப்ரெட் ஸ்காஃப்ரானெக், தன்னுடைய திறன்கள் குறித்து குந்தன்லாலிடம் கூறினார். அதன்பின், இந்தியாவின் மிகவும் நவீனமான பிளைவுட் ஆலையை உருவாக்குவதற்கான பொறுப்பை அவருக்கு வழங்கினார் குந்தன்லால். இதன்மூலம், மெக்கானிக்கான அவருடைய சகோதரர் உட்பட அவரின் ஒட்டுமொத்தக் குடும்பமும் தப்பித்தது.
இயந்திர கருவிகள் தொழிலதிபரான சியக்முன்ட் ரெட்டெர், குந்தன்லால் ஆரம்பத்தில் உதவியவர்களுள் ஒருவர் ஆவார். அவருடைய தொழில் நாஜி ஆட்சியில் வீழ்ந்தபோது, இந்தியாவுக்கு சென்று மீண்டும் தொடங்க குந்தன்லால் ஏற்பாடுகளை செய்தார்..
ஆல்ஃப்ரெட் வெக்ஸ்லர் (இடது மூலையில் நிற்பவர்), சியெக்ஃப்ரெய்ட் ஸ்காஃப்ரானெக் (இடமிருந்து மூன்றாவதாக நிற்பவர்), ஆல்ஃப்ரெட் ஸ்காஃப்ரானெக் (இடமிருந்து நான்காவதாக நிற்பவர்), குந்தன்லால் (இடது மூலையில் அமர்ந்திருப்பவர்) ஆகியோருடன் குந்தன்லால்
அமைதியாக சாதித்த குந்தன்லால்
இவை எல்லாமும் வியன்னாவில் உள்ள ஒரு மருத்துவமனையின் படுக்கையிலிருந்துதான் தொடங்கியது.
அச்சமயத்தில் நீரிழிவு மற்றும் மூல நோயால் பாதிக்கப்பட்டிருந்தார் 45 வயதான குந்தன்லால். அதற்காக புதிய சிகிச்சைகளை மேற்கொள்வது குறித்து யோசித்த வேளையில், வியன்னாவில் உள்ள நிபுணர் ஒருவர் குறித்து படித்திருந்தார். 1938-ம் ஆண்டில் அறுவை சிகிச்சையிலிருந்து மீண்டு வரும் வேளையில், அங்கு லூசி - ஆல்ஃப்ரெட் வெக்ஸ்லர் தம்பதியை சந்தித்தார் குந்தன்லால். அவர்கள் தங்களின் முதல் குழந்தையை எதிர்நோக்கியிருந்தனர். அவர்கள் மூலம் அங்கு யூதர்களுக்கு எதிரான வன்முறை மற்றும் அவர்களின் வாழ்வை அழித்தொழிப்பது பற்றி குந்தன்லால் அறிந்தார்.
அடுத்த சில மாதங்களில், அவர் அப்படியான மேலும் சிலரை சந்தித்தார். இந்த வெற்றியின் காரணமாக, குந்தன்லால் இந்தியாவுக்கு இடம்பெயர்வதற்கு விருப்பம் கொண்டுள்ள, திறன் வாய்ந்த பணியாளர்கள் வேண்டும் என செய்தித்தாள்களில் விளம்பரம் அளித்தார். அதற்கு ஆல்ஃப்ரெட் வெக்ஸ்லர், லாஷ், ஸ்காஃப்ரானெக் மற்றும் ரெட்டெர் போன்றவர்கள் விருப்பம் தெரிவித்தனர். குந்தன்லால் ஒவ்வொருவருக்கும் வேலை, நிதி ஆதாரங்களுக்கான உறுதி மற்றும் இந்தியாவுக்கு செல்வதற்கான விசாக்களை பெறுவதற்கு உதவி போன்றவற்றை வழங்கினார்.
"இந்த சிக்கலான, நீண்ட நடைமுறைகளை குந்தன்லால் செய்ததில் மிகவும் அசாதாரணமான ஒன்று என்னவென்றால், அனைத்தையும் அவர் மிகவும் அமைதியாக செய்ததுதான். தொழில்நுட்பங்களை இந்தியாவுக்கு பரிமாற்றம் செய்வது குறித்து இறுதி வரை அமைதி காத்தார்" என வினய் குப்தா எழுதுகிறார்...
அவர் தன்னுடைய நோக்கம் அல்லது திட்டங்களை எந்தவொரு இந்திய அல்லது பிரிட்டிஷ் அதிகாரிகளிடமும் பகிரவில்லை. பல மாதங்கள் கழித்து தன்னுடைய வீட்டுக்கு அவர் திரும்பிய பின்னர்தான் அவருடைய குடும்பமே இந்த திட்டங்கள் குறித்து அறிந்தது."
இந்தியா வந்தவர்கள் என்ன ஆனார்கள்?
1938-ம் ஆண்டு அக்டோபர் மாதம், குந்தன்லால் பணிக்கு அமர்த்தியவர்களுள் முதலாவதாக லூதியானா வந்தார் லாஷ்.
அவர் குந்தன்லால் வீட்டில் வரவேற்கப்பட்டார், ஆனால் அந்த அமைதியான நகரில் லாஷ் அசௌகரியத்தை உணர்ந்ததாக எழுதுகிறார் வினய் குப்தா. யூத சமூகம், கலாசாரம் இல்லாதது, நெருக்கடியில் ஆடை ஆலை ஆகியவற்றின் காரணமாக, மோசமான பணி சூழல்கள் மற்றும் லாபத்துக்கான வாய்ப்பு இல்லை என கூறி, லாஷ் சில வாரங்களிலேயே பாம்பேக்கு (தற்போது மும்பை) சென்றார். அதன்பின், அவர் லூதியானாவுக்கு திரும்பவே இல்லை.
ஃபிரிட்ஸ் வெய்ஸ் அதைவிட சிறிது காலமே இருந்தார், இரு மாதங்களுக்குள்ளேயே அவர் இடம்பெயர்ந்தார். அவருக்காக உருவாக்கப்பட்ட குந்தன் ஏஜென்சிஸ் நிறுவனம் தொடங்கப்படவே இல்லை. அவரும் விரைவிலேயே பாம்பேக்கு இடம்பெயர்ந்தார், அங்கு கட்டுமான வேலையில் இணைந்து பின் 1947-ம் ஆண்டில் இங்கிலாந்துக்கு இடம்பெயர்ந்தார்.
அவர்கள் வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்ததால் குந்தன்லாலுக்கு எவ்வித மனக்கசப்பும் ஏற்படவில்லை என, வினய் குப்தா எழுதுகிறார்.
"அதற்கு மாறாக குந்தன்லால் தன்னால் வியன்னாவுக்கு ஏற்ப வாழ்க்கை முறையையும் சமூக சூழலையும் வழங்க முடியவில்லை என சங்கடம் அடைந்ததாகவும் அப்படி ஏற்படுத்தியிருந்தால் இருவரும் லூதியானாவிலேயே தங்கியிருப்பார்கள் என எண்ணியதாகவும் என்னுடைய அத்தை கூறினார்."