ரஷியாவுடன் வர்த்தகம் செய்தால்... இந்தியா, சீனா, பிரேசிலுக்கு நேட்டோ தலைவர் எச்சரிக்கை..!

ரஷியாவுடன் வர்த்தகம் செய்தால்... இந்தியா, சீனா, பிரேசிலுக்கு நேட்டோ தலைவர் எச்சரிக்கை..!
ரஷியாவுடன் வர்த்தகம் செய்தால்...

ரஷியாவிடம் இருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு வாங்குவதைத் தொடர்ந்தால் விளைவுகளை சந்திக்க நேரிடும்.

புதினிடம் அமைதிப் பேச்சுவார்த்தைகளில் தீவிரமாக இருக்க வேண்டும் என்று சொல்ல வேண்டும்.

நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாடு மீது ரஷியா கடந்த 2022-ம் ஆண்டு போர் தொடுத்தது. இந்த போர் 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. இதில் உக்ரைனுக்கு அமெரிக்கா, நேட்டோ அமைப்பு உதவி வருகின்றன. அதேவேளையில் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சித்து வருகிறார்.

இந்த நிலையில் ரஷியாவுடன் வர்த்தகம் செய்து வரும் இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகளுக்கு நேட்டோ அமைப்பு தலைவர் மார்க் ருட்டே எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

உக்ரைனுடன் அமைதிப் பேச்சுவார்த்தையை ரஷியா தீவிரமாக எடுக்க மறுக்கிறது. நீங்கள் சீனாவின் அதிபராகவோ, இந்தியப் பிரதமராகவோ அல்லது பிரேசிலின் அதிபராகவோ இருந்து, ரஷியாவுடன் வர்த்தகம் செய்து அவர்களின் எண்ணெய் மற்றும் எரிவாயுவை வாங்குவதைத் தொடர்ந்தால் விளைவுகளை சந்திக்க நேரிடும்.

ரஷியாவுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்தால் கடுமையான தடைகள் விதிக்கப்படும். 100 சதவீத பொருளாதார தடைகள் விதிக்கப்படும். எனவே இந்த 3 தலைவர்களும் புதினுக்கு தொலைபேசி அழைப்பு விடுத்து, அவர் அமைதிப் பேச்சுவார்த்தைகளில் தீவிரமாக இருக்க வேண்டும் என்று சொல்ல வேண்டும். இல்லையென்றால் இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகளுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஏற்கனவே ரஷியாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 500 சதவீத வரி விதிக்கும் மசோதா அமெரிக்காவில் முன்மொழியப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.