ஏற்கனவே கூட்டிப்பெருக்க துடைப்பம் இல்லயாம்.. இப்ப சென்னை தாம்பரம் மாநகராட்சிக்கு எதிராக வந்த அதிமுக

ஏற்கனவே கூட்டிப்பெருக்க துடைப்பம் இல்லயாம்.. இப்ப சென்னை தாம்பரம் மாநகராட்சிக்கு எதிராக வந்த அதிமுக
சென்னை தாம்பரம் மாநகராட்சிக்கு எதிராக வந்த அதிமுக

சென்னை: தாம்பரம் மாநகராட்சி, மண்டலம் 3-ல் நிலவி வரும் பல்வேறு நிர்வாக சீர்கேடுகளுக்குக் காரணமான ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும், மக்களின் அடிப்படைத் தேவைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக அறிவித்துள்ளது.. ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ள தேதியையும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற தாம்பரம் மாநகராட்சி கூட்டத்தில், 2025-26ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) நிதிக்குழு தலைவர் ரமணி ஆதிமூலம் தாக்கல் செய்திருந்தார்.. அந்த நிதிநிலை அறிக்கையில், ஏராளமான கவர்ச்சி திட்டங்கள் வெளியாகியிருந்தன

குறிப்பாக, சாலையில் சுற்றி திரியும் மாடுகளை பிடித்து அடைக்க கால்நடை பவுண்டரிக்கு ஒரு கோடி ரூபாய், மாநகராட்சி பள்ளிகளில் தொழில்நுட்ப வகுப்பு ரோபோட்டிக் வகுப்புகளுக்காக ரூ.50 லட்சம், மகளிருக்காக பூங்கா அமைக்க ரூ.1 கோடி, அறிவியல் பூங்கா அமைக்க 5 கோடி ரூபாய், சண்முகம் சாலையை ஸ்மார்ட் சாலையாக மாற்ற ரூ.10 கோடி, குடிநீர் திட்டத்திற்காக ரூ.27 கோடி, நவீன வசதிகளுடன் கூடிய பேருந்து நிலையம் அமைக்க ரூ.3 கோடி, என 71 முக்கிய அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.

1,082 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2025-26ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தொடர்பாக மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் சேலையூர் சங்கர் செய்தியாளர்களிடம் பேசும்போது, தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார்.

அப்போது, "இந்த நிதிநிலை அறிக்கை கூட்டம் குறித்து எந்தவித முன்னறிவிப்பு எங்களுக்கு தெரிவிக்கவில்லை. குப்பை அள்ளுவதற்கு பல கோடி ரூபாய் ஒப்பந்தப்புள்ளி விடப்பட்டிருந்த நிலையில், துப்புரவு பணி செய்யும் தொழிலாளர்களுக்கு கூட்டி பெருக்குவதற்கு துடைப்பம் கூட இல்லாத நிலையில் தான் தாம்பரம் மாநகராட்சி இருந்து வருகிறது

மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட தாம்பரத்தில் கடந்த மூன்று வருடங்களில் 30 விழுக்காடு கூட பணிகள் முடிவடையவில்லை. செயலிழந்த நிலையில் இருக்கும் இந்த மாநகராட்சி, வெறும் பட்ஜெட், அறிவிப்புகள் மூலமாக செயல்பட்டு வருகிறது என்று குற்றஞ்சாட்டியிருந்தார்.

இந்நிலையில், தாம்பரம் மாநகராட்சியை கண்டித்து வரும் 11-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவித்துள்ளார். இது தொடர்பாக, அவர் விடுத்த அறிக்கையில் உள்ளதாவது:

நிர்வாகத் திறனற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான கடந்த 4 ஆண்டு கால திமுக ஆட்சியில், தமிழக மக்கள் பல்வேறு வகைகளில் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்களின் அடிப்படை மற்றும் அத்தியாவசியத் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றித் தராமல், திமுக அரசு மக்களை ஏமாற்றி வருகிறது. இதற்கெல்லாம் விடிவுகாலம் விரைவில் வர உள்ளது

குறிப்பாக, தாம்பரம் மாநகராட்சி, மண்டலம் 3, அஸ்தினாபுரம் பகுதிக்கு உட்பட்ட இடங்களில் அத்தியாவசியத் தேவைகள் நிறைவேற்றப்படாத காரணத்தால், அப்பகுதி வாழ் மக்கள் மிகுந்த சிரமத்துடன் வாழ்ந்து வருவதாக, தொடர்ந்து புகார்கள் வருகின்றன

அவர்களின் நிலத்தடி நீருக்கு ஆதாரமாக விளங்கி வரும் புத்தேரியில் கழிவுநீர் கலப்பதால், சுற்று வட்டாரங்களில் நிலத்தடி நீர் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதோடு, அதை பயன்படுத்தும் பொதுமக்கள் தோல் வியாதிகள் உள்ளிட்ட எண்ணற்ற சுகாதார சீர்கேடுகளால் பெரிதும் அவதியுற்று வருகின்றனர்.

நெமிலிச்சேரி ஏரி

பொதுமக்கள் ஒன்று கூடி அகற்றிய பின்னரும், ஆளுங்கட்சியின் அலட்சியத்தால் நெமிலிச்சேரி ஏரி மீண்டும் ஆகாயத் தாமரை கொடிகளால் சூழப்பட்டு, கழிவுநீர் குட்டையாக மாறியுள்ளது. பாதாள சாக்கடை திட்டப் பணிகள் முறையாக மேற்கொள்ளாததால், பெரும்பாலான இடங்களில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் ஆறுபோல் சாலைகளில் வழிந்தோடுகிறது.

குரோம்பேட்டை கணபதிபுரம் சுடுகாடு எவ்வித பராமரிப்பும் இல்லாமல், தகன மேடையின் மேற்கூரை எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. அஸ்தினாபுரத்தில் நாள்தோறும் 5 சிற்றுந்துகள் இயங்கி வந்த நிலையில், தற்போது ஒரே ஒரு சிற்றுந்து மட்டுமே இயக்கப்படுவதால் ஏழை, எளிய மக்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர்