நாடு முழுவதும் 1.20 கோடி ஆதார் எண்கள் முடக்கம்; காரணம் இதுதான்

ஆதார் அடையாள அட்டை என்பது மிக முக்கியமான ஆவணமாக உள்ளது. வங்கி கணக்கு துவங்க,அரசின் நலத்திட்டங்களை பெற என அரசின் பல்வேறு சலுகைகளை பெறுவதற்கும் ஆதார் மிக முக்கியமான ஆவணமாக விளங்குகிறது. ஆதார் எண்களை பயன்படுத்தி மோசடிகள் எதுவும் நடைபெறாமல் இருக்க சமீப காலமாக பல்வேறு நடவடிக்கைகளை ஆதார் ஆணையம் எடுத்து வருகிறது .அதாவது, ஆதார் விவரங்களை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை அப்டேட் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை ஆதார் ஆணையம் மேற்கோண்டு வருகிறது.
இறந்தவர்களின் ஆதார் எண்களை முடக்கவும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இறந்த நபர்களின் குடும்ப உறுப்பினர்கள் இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட தேவையான ஆவணங்களை பயன்படுத்தி, இந்த சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த நிலையில், நாடு முழுவதும் 1.20 கோடி ஆதார் எண்கள் முடக்கப்பட்டுள்ளது. இறந்த பதிவுகளை மாநிலங்களிடம் இருந்து சேகரித்து 1.20 கோடி மரணம் அடைந்தவர்களின் எண்கள் முடக்கப்பட்டுள்ளதாக ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது. முறைகேடுகளுக்கு ஆதார் எண்கள் பயன்படுத்தப்படாமல் இருப்பதை தவிர்க்க இந்த நடவடிக்கையை ஆதார் ஆணையம் மேற்கொண்டுள்ளது