முதல்முறையாக விமானத்தில் பறந்த அரசு பள்ளி மாணவியர்: கனவு நிறைவேறியதாக உற்சாகம்

முதல்முறையாக விமானத்தில் பறந்த அரசு பள்ளி மாணவியர்: கனவு நிறைவேறியதாக உற்சாகம்
5வது ஆண்டாக மாணவர்களை விமானத்தில் தனது சொந்த செலவில் அழைத்து செல்கிறார்,' என்றனர்.

கோவை: கல்வியை ஊக்குவிக்கும் வகையில், அரசு பள்ளி மாணவியரை விமான பயணம் அழைத்து சென்ற முன்னாள் ஊராட்சிமன்ற தலைவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

கோவை மாவட்டம் காரமடை சிக்காரம்பாளையம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஞானசேகரன். இவர் கல்வியை ஊக்குவிக்கும் வகையில், கடந்த 5 ஆண்டுகளாக கோவையில் இருந்து சென்னைக்கு அரசு பள்ளி மாணவ- மாணவிகளை விமானத்தில் அழைத்து சென்று வருகிறார்.

இந்த ஆண்டு கண்ணார்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவ-மாணவிகளை கோவையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் அழைத்து சென்றார். மேலும், தோலம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் பரளி அரசு உயர்நிலைபள்ளியில் இருந்து ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களையும் அழைத்து கடந்த 5 ஆண்டுகளில் கல்வி சுற்றுலாவில் 16 குழுக்களாக 850 மாணவ, மாணவிகளை விமானத்தில் அழைத்து சென்று ஞானசேகரன் கனவை நினைவாக்கி உள்ளார். தங்கள் நீண்ட நாள் கனவு இந்த பயணத்தின் மூலம் நிறைவேறி விட்டதாக விமானத்தில் பறந்த மாணவ மாணவியர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்

இது குறித்து முன்னாள் ஊராட்சி தலைவர் ஞானசேகரன் கூறுகையில், 'ஏழை மாணவர்கள், அவர்களின் பெற்றோர்களின் கனவை என்னால் முடிந்த வரை நிறைவேற்ற முயற்சி செய்து வருகிறேன்,' என்றார்.

ஆசிரியர்கள் கூறியதாவது: சிக்காரம்பாளையம் ஊராட்சி முன்னாள் தலைவர் ஞானசேகரன் ஆண்டுதோறும் 10ம் வகுப்பு அரசு பொதுதேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், பெற்றோர் இல்லாத மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறார்.

ஆண்டுதோறும் மாணவர்களுக்கு சீரூடை, நோட்டு, புத்தகம் வழங்கி வருகிறார். தற்போது 5வது ஆண்டாக மாணவர்களை விமானத்தில் தனது சொந்த செலவில் அழைத்து செல்கிறார்,' என்றனர்.