சவுக்கு சங்கர் மீது உள்ள.. எல்லா கிரிமினல் வழக்குகளையும் லிஸ்ட் போடுங்க.. அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு!

சவுக்கு சங்கர் மீது உள்ள.. எல்லா கிரிமினல் வழக்குகளையும் லிஸ்ட் போடுங்க.. அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு!
யூடியூபர் 'சவுக்கு' சங்கர் என்கிற ஏ. சங்கர் (48) மீது நிலுவையில் உள்ள கிரிமினல் வழக்குகள், மற்றும் புலன்

சென்னை: யூடியூபர் 'சவுக்கு' சங்கர் என்கிற ஏ. சங்கர் (48) மீது நிலுவையில் உள்ள கிரிமினல் வழக்குகள், மற்றும் புலன் விசாரணை முடிவடைந்த வழக்குகள் குறித்த பட்டியலை ஜூலை 29-க்குள் தாக்கல் செய்யுமாறு தமிழ்நாடு உள்துறை செயலாளர், காவல்துறை இயக்குநர் ஜெனரல் (டிஜிபி) மற்றும் கிரேட்டர் சென்னை காவல் ஆணையர் ஆகியோருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது

சவுக்கு மீடியா (ஒன் பெர்சன் கம்பெனி) பிரைவேட் லிமிடெட் செயல்பாட்டில் காவல்துறை தலையிடுவதாகக் கூறி சங்கர் தாக்கல் செய்த மனு மீது பதிலளிக்குமாறு மூன்று உயர் அதிகாரிகளுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அவர்களின் எதிர் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞரிடம் நீதிபதி கூறுகையில், கிரிமினல் வழக்குகளில் பரபரப்புக்காக சிலர் இணைய ஊடகங்களில் விசாரணை நடத்துகிறார்கள். வழக்கு விசாரணை கோர்ட்டில் நடக்கும் போதே.. சிலர் ஊடகங்களில் அதை பற்றி தனியாக விசாரணை, விவாதங்களை செய்கிறார்கள். வழக்குகளின் முடிவுகளைப் பார்க்காமல், காவல்துறைக்கும், நீதிபதிகளுக்கும் ஒரு வழக்கைக் எவ்வாறு கையாள வேண்டும் என்று கட்டளையிடும் அளவுக்கு செல்கிறார்கள்.. எங்களுக்கே அறிவுரைகளை கூட வழங்குகிறார்கள் என்று கண்டிப்புடன் நீதிபதி விமர்சித்தார்

பத்திரிகையாளர்கள் அரசியலமைப்பின் 19வது பிரிவின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்தக்கூடாது. மேலும் நாட்டின் ஒவ்வொரு நிறுவனத்தின் மீதும் ஆரம்ப கட்ட விசாரணை/விசாரணையிலேயே சேற்றை வாரி இறைக்கக் கூடாது.

சவுக்கு சங்கருக்கு கோர்ட் கண்டிப்பு

சட்டத்தின் 19வது பிரிவு என்பது ஒரு ஆயுதம். பொதுவாக நல்ல காரணத்திற்காக அந்த 19வது பிரிவு ஆயுதத்தை எடுக்க வேண்டும், ஆனால் மிரட்டுவதற்காக அல்ல. சில பத்திரிகையாளர்கள் மக்களை மிரட்டுகிறார்கள். இது ஒரு கசப்பான உண்மை... போலீசாரும், நீதிமன்றங்களும் உங்கள் கட்டளைப்படி செயல்பட வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது.... இது சரியில்லை... இதையெல்லாம் செய்து மக்களை தவறாக வழிநடத்துகிறீர்கள்," என்றும் நீதிபதி கண்டித்தார்.

சங்கர் தனது மனுவில், சென்னை போலீஸ் கமிஷனர் ஏ. அருண் எங்களுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். நானும் எனது ஊழியர்களும் போலீஸ் அட்டூழியங்கள், முறைகேடுகள் மற்றும் பல விவகாரங்களில் கமிஷ்னர் அருண் நடவடிக்கைகள் எடுக்காதது குறித்து தனது யூடியூப் சேனல் மூலம் வெளிச்சம் போட்டுக் காட்டியதால் பல்வேறு "சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு" உட்படுத்துவதாக குற்றம் சாட்டியிருந்தார்.

பிப்ரவரி மாதம் கும்பமேளா நிகழ்வை ஒளிப்பதிவு செய்ய தனது குழுவினருடன் உத்தரபிரதேசத்தில் உள்ள பிரயாக்ராஜ் நகருக்கு சாலை மார்க்கமாக சென்றபோது, தெலுங்கானா காவல்துறையைச் சேர்ந்த 20 பேர் கொண்ட குழுவினர் அவர்களை வழிமறித்து ராமையம்பேட்டை காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்

.பிப்ரவரி 8ஆம் தேதி ஓட்டுநர் மற்றும் ஒளிப்பதிவாளர் உட்பட அனைத்து குழுவினரும் சுமார் இரண்டு மணி நேரம் தடுத்து வைக்கப்பட்டதாகவும், மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் (Pollution Under Check - PUC) இல்லாததால் ₹1,000 செலுத்திய பின்னரே செல்ல அனுமதிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். இந்த விவகாரத்தில் சென்னை காவல்துறையினரின் அறிவுறுத்தலின் பேரில் தங்களுக்கு தொல்லை கொடுக்கப்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

சென்னை காவல்துறையினர் தனது நடமாட்டத்தை கண்காணித்து துன்புறுத்துவது குறித்து உள்துறை செயலாளருக்கு உடனடியாக மின்னஞ்சல் மூலம் புகார் அனுப்பியதாகவும் மனுதாரர் கூறினார். மேலும் மே மாதம் தனது ஒளிப்பதிவாளர் மற்றும் காட்சி எடிட்டருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிள்கள் சிறிய குற்றங்களுக்காக காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.

புகார் மேல் புகார்

இதையடுத்து, மே 23-ம் தேதி உள்துறை செயலாளருக்கு இரண்டாவது புகார் அனுப்பினார். ஏனெனில் அவர் தமிழ்நாடு காவல்துறை (சீர்திருத்தங்கள்) சட்டம், 2013-ன் கீழ் அமைக்கப்பட்ட மாநில காவல்துறை புகார்கள் ஆணையத்தின் தலைவராக இருந்தார். எனவே காவல்துறையினரின் அத்துமீறல் புகார்களை விசாரிப்பதற்குரிய சரியான அதிகாரி அவர் எனவும் குறிப்பிட்டிருந்தார். மேலும் ஜூன் 21-ம் தேதி டிஜிபிக்கும் இதே போன்ற புகார் அளித்ததாகக் கூறிய சவுக்கு சங்கர், தனது புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், சவுக்கு மீடியா செயல்படுவதில் தலையிடுவதை தடுக்கவும் உள்துறை செயலாளர் மற்றும் டிஜிபிக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரினார்.

இருப்பினும், உள்துறை செயலாளரின் சார்பில் ஆஜரான கூடுதல் அரசு வழக்கறிஞர் ஜெ. ரவீந்திரன், சவுக்கு சங்கர் அளித்த புகார்கள் 2013 சட்டத்தின் வரம்பிற்குள் கண்டிப்பாக வராது என்று வாதிட்டார். மேலும் இரண்டு வாரங்களுக்குள் பதில் பிரமாணப் பத்திரம் மூலம் தனது அனைத்து சமர்ப்பிப்புகளையும் எழுத்துப்பூர்வமாக தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.இதன் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றம் யூடியூபர் சவுக்கு சங்கர் மீதுள்ள குற்றவியல் வழக்குகளின் பட்டியலை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.