அபராத வட்டி தள்ளுபடியாகும் எதிர்பார்ப்பில் கடனை திரும்ப செலுத்தாமல் பலர் 'டிமிக்கி'

சென்னை: அரசு ஏற்கனவே அபராத வட்டியை தள்ளுபடி செய்த நிலையில், மீண்டும் ஒரு முறை தள்ளுபடி செய்யும் எனக்கருதி, கடன் வாங்கியவர்கள், அதை திரும்ப செலுத்தாமல் இருப்பதால், வீட்டுவசதி சங்கங்களில் நிலுவையில் உள்ள கடன் பாக்கியை வசூலிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழக மக்களுக்கு, நியாயமான விலையில் வீட்டு மனைகள் கிடைக்கவும், குறைந்த வட்டியில் வீட்டுக்கடன் கிடைக்கவும், நகர்ப்புற வீட்டுவசதி சங்கங்கள் துவக்கப்பட்டன. தற்போது, 680 கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள் உள்ளன.
இவை கடன் வழங்கவும், புதிய திட்டங்களை செயல்படுத்தவும், அவற்றை ஒருங்கிணைக்கவும், 'கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களின் இணையம்' உள்ளது.
வீட்டுவசதி சங்கங்களில் நிலுவையில் உள்ள கடன் தொகையை வசூலிக்க, அபராத வட்டி தள்ளுபடி திட்டம், சில ஆண்டுகளுக்கு முன் அறிவிக்கப்பட்டது. நிலுவைத்தொகை செலுத்திய 5,300 பேர், இன்னும் பத்திரம் திரும்ப கிடைக்காமல் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், தற்போது நிலுவையில் உள்ள, 1,000 கோடி ரூபாய் கடனை வசூலிக்கும் பணியை முடுக்கிவிட, சங்கங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆனால், அபராத வட்டி தள்ளுபடி சலுகை வழங்குவது குறித்து, அரசு எந்த முடிவையும் எடுக்கவில்லை. இதனால், அபராத வட்டியுடன், கடன் நிலுவையை வசூலிக்க வேண்டிய நெருக்கடி, ஊழியர்களுக்கு ஏற்பட்டு உள்ளது.
இதுகுறித்து, கூட்டுறவு வீட்டுவசதி சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவதுகூட்டுறவு வீட்டுவசதி இணையத்தில், வீட்டுவசதி சங்கங்கள் பெயரில் உள்ள நிலுவைத்தொகை, மத்திய கால கடனாக மாற்றப்பட உள்ளது. அதேநேரம் உறுப்பினர்கள் பெயரில் உள்ள நிலுவைத் தொகையை வசூலிப்பதற்கான பணிகள் முடங்கிஉள்ளன.
ஏற்கனவே பணம் செலுத்தியவர்களுக்கு, இன்னும் பத்திரம் கிடைக்காத நிலையில், நிலுவை கடனை, அபராத வட்டியுடன் திரும்ப செலுத்த யாரும் தயாராக இல்லை.
இதனால், சங்கங்கள் கடனை வசூலிக்க முடியாமல், புதிய கடன்களை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது, சங்கங்கள் பெயரில் உள்ள நிலுவைத் தொகையை, மத்திய கால கடனாக மாற்றுவதிலும் பிரச்னையை ஏற்படுத்தி உள்ளது.
வீட்டு வசதித்துறை அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகள், வீட்டு வசதி வாரியம், நகர், ஊரமைப்பு துறையான டி.டி.சி.பி., நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய திட்டங்கள் தொடர்பாக மட்டும் கவனம் செலுத்துகின்றனர்.
பரிதவிப்பு
வீட்டுவசதி சங்கங்கள் தொடர்பான பிரச்னைகளை கண்டு கொள்வதில்லை. இதற்கென தனியாக நேரம் ஒதுக்க, அமைச்சர் மற்றும் அதிகாரிகள் தயாராக இல்லை.
இதனால், நிலுவை கடன்களை வசூலிக்க முடியாமல், வீட்டுவசதி சங்கங்களும், பத்திரம் கிடைக்காமல் உறுப்பினர்களும் பரிதவிக்கின்றனர். இதன் பிறகாவது இந்த விஷயத்தில் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.