சென்னை வீதிகளில் கேரள ரோபோக்கள்! அடடே இவ்வளவு சுத்தமா? மாநகராட்சி புதிய முயற்சி

சென்னை வீதிகளில் கேரள ரோபோக்கள்! அடடே இவ்வளவு சுத்தமா? மாநகராட்சி புதிய முயற்சி
கழிவுநீர் குழாய்களில் ஏற்பட்டிருக்கும் அடைப்புகளை சுத்தம் செய்ய ரோபோக்களை சென்னை மாநகராட்சி

சென்னை: கழிவுநீர் குழாய்களில் ஏற்பட்டிருக்கும் அடைப்புகளை சுத்தம் செய்ய ரோபோக்களை சென்னை மாநகராட்சி பயன்படுத்தி வருகிறது. இந்நிலையில், கழிவுநீர் உந்து நிலையங்களும் ரோபோக்களை பயன்படுத்தும் முயற்சியில் சென்னை மாநகராட்சி தற்போது இறங்கியுள்ளது. இதன் மூலம் கழிவுகள் அடைப்பும், வீதிகளில் கழிவு நீர் வெளியேற்றமும் இருக்காது என்று மாநகராட்சி அதிகாரிகள் கூறுகின்றனர்.

கேரளாவைச் சேர்ந்த ஜென்ரோபோடிக்ஸ் என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம் உருவாக்கிய ரோபோக்கள் கடந்த ஒரு வருடமாக குழாய்களில் ஏற்படும் அடைப்புகளை சரி செய்ய மாநகராட்சியால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் குழாய்களை மட்டுமல்லாது, கழிவுநீர் உந்து நிலையத்திலும் ரோபோ பயன்பாட்டை கொண்டுவர மாநகராட்சி திட்டமிட்டிருக்கிறது. எனவே சோதனை முயற்சியாக திருவான்மியூரில் உள்ள கழிவுநீர் கிணறுகளை சுத்தம் செய்ய 'வில்போர்' என்ற அதிநவீன ரோபோவை பயன்படுத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். ரிமோட் கண்ட்ரோல் யூனிட் மற்றும் கேமராக்களைக் கொண்ட இந்த ரோபோ, ஜென்ரோபோடிக்ஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. இது 10 மீட்டர் ஆழம் வரை உள்ள கிணறுகளில் இறக்கப்பட்டு, படிந்திருக்கும் சகதியை அகற்றும் திறன் கொண்டது.

உயர் அழுத்த நீர் பீச்சிகள் மற்றும் கிரைண்டர்களுடன், படிந்திருக்கும் கழிவுகளை நுண்ணிய துகள்களாக அரைத்து இந்த ரோபோ வெளியேற்றுகிறது. இதன் மூலம், வழக்கமான முறைகளில் உள்ள சவால்கள் தவிர்க்கப்படுகின்றன. எனவே கழிவுநீர் கிணறுகளை சுத்தம் செய்யும் திறன் மேம்படுத்தப்பட்டு, குழாய்களில் கழிவுநீர் வெளியேறும் புகார்கள் குறையும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

திருவான்மியூர் கழிவுநீர் உந்து நிலையம் ஒரு நாளைக்கு 15 மில்லியன் லிட்டர் கழிவுநீரை கையாளும் திறன் கொண்டது. இதுபோன்ற ரோபோ சாதனங்கள் ஏற்கனவே ஆந்திராவின் நெல்லூர் மற்றும் கேரளாவின் திருவனந்தபுரத்தில் பயன்பாட்டில் உள்ளன. சென்னையில் மொத்தம் 375 கழிவுநீர் உந்து நிலையங்கள் உள்ளன. இந்த சோதனை முயற்சி வெற்றி பெற்றால், மற்ற உந்து நிலையங்களிலும் இதுபோன்ற ரோபோக்கள் பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய தொழிற்சங்க தலைவர் ஜி.பீம் ராவ் இது குறித்து கூறுகையில், "இது தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வரவேற்கத்தக்க முயற்சி. மனிதர்களின் நேரடி தலையீட்டை குறைக்கவும் இது உதவும். இதுபோன்ற முயற்சிகள் அதிக மக்கள் தொகை கொண்ட நகர்ப்புற இடங்களுக்கு விரிவுபடுத்தப்பட வேண்டும். மேலும், வழக்கமான பராமரிப்புக்காக கண்காணிக்கப்பட வேண்டும்" என்று கூறியுள்ளார்..

மட்டுமல்லாது கழிவுநீர் நெட்வொர்க் பராமரிப்புக்கு பணியமர்த்தப்பட்ட தொழிலாளர்கள் வேறு பணிகளுக்கு மாற்றப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். சென்னையில் கழிவுநீர் மற்றும் நீர் நெட்வொர்க் பராமரிப்புக்காக சுமார் 2,850 தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.