திமுகவின் தவறுகளை சுமக்கும் கூட்டணி கட்சிகள்... எடப்பாடி பழனிசாமி பேச்சு

சீர்காழி: “திமுக செய்யும் தவறுகளை கூட்டணிக் கட்சிகள் சுமந்து கொண்டுள்ளன. கூட்டணி கட்சிகள் விழிப்புடன் இருக்க வேண்டும்” என்று அதிமுக பொதுச் செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கூறினார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பிரச்சார பயணத்தை அதிமுக பொதுச் செயலாளர் பழனிச்சாமி மேற்கொண்டார். சீர்காழி பகுதிகளில் கட்சி தொண்டர்கள், பொது மக்களிடையே அவர் பேசியது: “மயிலாடுதுறைக்கு வந்த முதல்வர் ஸ்டாலின், பழனிசாமி ஒன்றும் செய்யவில்லை என்று பேசி சென்றுள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்தையே உருவாக்கி கொடுத்துள்ளேன்.
நான் பொறுப்பேற்ற பிறகு 6 மாவட்டங்களை உருவாக்கி கொடுத்துள்ளோம். 11 மருத்துவக் கல்லூரிகள், 7 சட்டக் கல்லூரிகள், 67 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 21 பாலிடெக்னிக் கல்லூரிகள் கொடுத்துள்ளோம். படிப்பு என்றால் பழனிசாமிக்கு கசக்கும் என்று முதல்வர் கூறினார். ஸ்டாலின் அரசால் ஒரு மாவட்டத்தை உருவாக்க முடிந்ததா? மருத்துவக் கல்லூரியை கொண்டுவர முடிந்ததா ?
இந்தப் பகுதியில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டங்களுக்கு துணை முதல்வராக இருந்தபோது புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டவர் ஸ்டாலின். ஆனால். விவசாய நிலங்களை பாதுகாக்க மத்திய அரசோடு தொடர்புகொண்டு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தை கொண்டு வந்தேன். அதனால், எந்த அரசு நல்ல அரசு என்பதை மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
.