அதிகாலை 4:00க்கே பிரியாணி விற்பனை; 6:00 மணிக்கு திறக்க போலீசார் அறிவுரை..

கர்நாடக மாநிலம், பெங்களூரு ஹொஸ்கோட்டின் மாலுார் - பைரனஹள்ளி நெடுஞ்சாலையில், 'மணி தம் பிரியாணி' கடை உள்ளது. கிராமப்புற ஸ்டைலில் பிரியாணி தயார் செய்யப்பட்டதால், நாளடைவில் இந்த கடை பிரபலமானது.
இங்கு, அதிகாலை 4:00 மணிக்கு சுடச்சுட பிரியாணி விற்பனை துவங்கிவிடும். பிரியாணி சாப்பிடுவதற்காக அதிகாலை 2:00 முதல் 3:00 மணிக்கே, 1.5 கி.மீ., துாரம் வரை மக்கள் வரிசையில் நின்றிருப்பர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல், சிறுசிறு தகராறுகள் ஏற்பட்டு வந்தன.
அசம்பாவிதம் ஏதும் ஏற்படாத வகையில், அதிகாலை 4:00 மணிக்கு பதில், 6:00 மணிக்கு திறக்கும்படி போலீசார் உத்தரவிட்டு உள்ளனர்
ஹொஸ்கோட் போலீசார் கூறியதாவது:
அதிகாலை 4:00 மணிக்கு திறக்கும் கடைக்காக, 2:00 மணிக்கே மக்கள் வர துவங்கி விடுகின்றனர்.
கார், இருசக்கர வாகனங்களில் வருவோர், சாலையின் இருபுறத்திலும் வாகனங்களை நிறுத்திவிட்டு, வரிசையில் நிற்கின்றனர்.
இதனால் பாதசாரிகள், சாலையில் நடந்து செல்ல வேண் டிய கட்டாயம் ஏற்படுகிறது. போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கிறது. அதிகாலை நேரத்தில் லாரி ஓட்டுநர்கள் வேகமாக செல்வதால், விபத்துகள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.
அத்துடன் சிலர் வரிசையில் நின்றபடி கஞ்சா புகைக்கின்றனர். சிலர் மதுபோதையில் நிற்கின்றனர். ஆண்களும், பெண்களும் ஒன்றாக நிற்கின்றனர். அசம்பாவிதம் நடந்தால் யார் பொறுப்பு?
எனவே, காலை 4:00க்கு பதிலாக, 6:00 மணிக்கு கடையை திறக்க வேண்டும் என்று அதன் உரிமையாளருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்..