பி.எஃப். முன்பணமாக இனி மூன்றே நாளில் ₹5 லட்சம் பெறலாம் - எப்படி?

****AGNISIRAGU****
வருங்கால வைப்பு நிதி கணக்கு வைத்திருப்பவர்கள் 'ஆட்டோ செட்டில்மென்ட்' முறையில் இனி ரூ.5 லட்சம் வரை எடுக்க முடியும் என்றும் அந்த செயல்முறை 72 மணி நேரத்திற்குள் நிறைவடையும் என்றும் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) அறிவித்துள்ளது. இதற்கு முன்னர் இந்த உச்சவரம்பு ஒரு லட்சம் ரூபாயாக இருந்தது.
ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பு முன்பணம் கேட்பு உச்சவரம்பை ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தியிருப்பதாக தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் மன்சுக் மாண்டவியா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பிஎஃப் முன்பணம் 72 மணி நேரத்திற்குள் கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். அதாவது ஆட்டோ செட்டில்மென்ட் முறையில் முன்பணம் கோருபவர்களுக்கு அவர்கள் கேட்கும் தொகை மூன்று நாட்களுக்குள் கிடைக்கும்.
மாண்டவியா பதிவின்படி, 2023-24 நிதியாண்டில் 89.52 லட்சம் ஆட்டோ செட்டில்மென்ட் கோரிக்கைகளுக்கான தொகைகள் கொடுக்கப்பட்டது, அதுவே 2024-25ஆம் ஆண்டில் 2.32 கோடி ஆட்டோ செட்டில்மென்ட் கோரிக்கைகளுக்கு தொகை கொடுக்கப்பட்டது. அதாவது ஒரு வருடத்தில் ஆட்டோ செட்டில்மென்ட் கோரிக்கை 161 விழுக்காடு அதிகரித்துள்ளது.
வருங்கால வைப்பு நிதி கோரிக்கைகளை விரைவாக செயல்படுத்துவதற்கான செயல்முறைதான் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் ஆட்டோ செட்டில்மென்ட் முறை. இதற்கு மனித தலையீடு ஏதும் தேவையில்லை. இந்த கோரிக்கைகளுக்கு டிஜிட்டல் சரிபார்ப்பு படிமுறைகள் மூலம் ஒப்புதல் வழங்கப்படுகிறது.
****AGNISIRAGU****