தூங்குவதன் மூலம் ரூ.9 லட்சம் சம்பாதித்த UPSC தேர்வுக்கு தயாராகும் பெண் - எப்படி தெரியுமா?

இந்தியர்களின் தூக்கம்
மனிதர்கள் நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருப்பதற்கு, சராசரியாக 6-8 மணி நேர உறக்கம் அவசியம் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றன
செல்போன் பயன்பாடு அதிகரித்த பின்னர், மனிதர்களின் தூங்கும் நேரம் குறைந்து விட்டதாக வெளியாகும் ஆய்வு அறிக்கைகள் கவலையளிக்கின்றன.
வேலை மற்றும் திரை நேரம் காரணமாக, 58% இந்தியர்கள் இரவு 11 மணிக்குப் பிறகு தூங்குகிறார்கள். காலையில் சுமார் 50% மக்கள் சோர்வாக உணர்கிறார்கள் என கிரேட் இந்தியன் ஸ்லீப் ஸ்கோர்கார்டு 2025 அறிக்கை தெரிவித்துள்ளது.
தூங்கினால் ரூ.9 லட்சம் பரிசு
இந்நிலையில், பெண் ஒருவர் நன்றாக தூங்கியதற்காக ரூ.9 லட்சம் பரிசு பெற்றுள்ளார்.
பெங்களூருவை தளமாக கொண்டு இயங்கி வரும் WakeFit என்ற ஸ்டார்ட்அப் நிறுவனம் தூக்கத்தை ஊக்கப்படுத்தும் விதமாக, கடந்த 4 ஆண்டுகளாக Sleep Internship நடத்தி வருகிறது.
இந்த ஆண்டு நடைபெற்ற இந்த போட்டிக்கு லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்ததில், 15 பேர் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
இதில் தேர்வு செய்யப்பட்ட 15 பங்கேற்பாளர்களுக்கு வேக்ஃபிட் மெத்தைகள் மற்றும் தொடர்பு இல்லாத தூக்க கண்காணிப்பு சாதனங்கள் வழங்கப்பட்டன. இதன் மூலம், அவர்களின் தூக்க நேரம் மற்றும் தூக்கத்தின் தரம் கண்காணிக்கப்பட்டது.
இதில் கலந்து கொள்பவர்கள் தொடர்ச்சியாக 60 நாட்களுக்கு, குறைந்தது 9 மணி நேரங்கள் தூங்க வேண்டும். இதில், கண்ணை கட்டி படுக்கையை தயார் செய்வது போன்ற சில செயல்பாடுகள் இருக்கும்.
இந்த போட்டிக்கு தேர்வான 15 பேருக்கும், தலா ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்பட்டது. போட்டியில், 91.36 மதிப்பெண்கள் பெற்று புனேவை சேர்ந்த Pooja Madhav Wavhal என்ற பெண் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
சாம்பியன் பட்டம் வென்ற இவருக்கு ரூ.9.1 லட்சம் பரிசு வழங்கப்பட்டுள்ளது. 22 வயதான பூஜா, ஐபிஎஎஸ் ஆகும் ஆசையில், UPSC தேர்வுக்கு தயாராகி வருகிறார்.
இது குறித்து பேசிய அவர், "நான் இரவில் 4-5 மணி நேரம் மட்டுமே தூங்குவேன். இந்த பயிற்சி எனக்கு வழக்கமான தூக்கத்தின் முக்கியத்துவத்தைக் கற்றுக் கொடுத்தது. இப்போது நான் 9 மணி நேரம் தூங்குகிறேன், முன்பை விட அதிக சுறுசுறுப்பாக உணர்கிறேன்" என தெரிவித்துள்ளார்