திருவனந்தபுரத்தில் பழுதாகி நிற்கும் பிரிட்டிஷ் விமானத்தை சரி செய்ய பொறியாளர்கள் வருகை

திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் பழுதாகி நிற்கும் பிரிட்டிஷ் விமானப்படையின் எப்-35 ரக போர் விமானத்தை சரி செய்ய பிரிட்டிஷ் விமான பொறியாளர்கள் திருவனந்தபுரம் வந்துள்ளனர்.
இந்திய கடற்படையுடன் கூட்டுப் பயிற்சியில் ஈடுபவதற்காக பிரிட்டிஷ் கடற்படையின் எச்எம்எஸ் பிரின்ஸ் ஆப் வேல்ஸ் விமானம் தாங்கி போர்க்கப்பல் கடந்த மாதம் வந்தது. இதில் இருந்து புறப்பட்ட எப்-35 ரக போர் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக திருவனந்தபுரம் விமான நிலையத்தில் கடந்த மாதம் 14-ம் தேதி அவசரமாக தரையிறங்கியது. இதை பழுது பார்க்கும் முயற்சிகள் தோல்வியடைந்தன. இந்த விமானத்தின் இறக்கைகளை பிரித்து ஜம்போ விமானத்தில் ஏற்றிச் செல்வதிலும் சிரமங்கள் இருந்தன.
இதனால் பிரிட்டிஷ் விமான பொறியாளர்கள் குழு, ராயல் விமானப்படையின் ஏர்பஸ் ரக சரக்கு விமானத்தில் எப்-35 விமானத்தை பழுது பார்ப்பதற்கு உபகரணங்களுடன் நேற்று திருவனந்தபுரம் வந்தடைந்தனர். ரூ.924 கோடி மதிப்பிலான இந்த விமானம், பழுதுபார்க்கும் மையத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு அதை சரிசெய்யும் பணியில் பிரிட்டிஷ் பொறியாளர்கள் ஈடுபடவுள்ளனர். இவர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாக பிரிட்டிஷ் தூதரகம் தெரிவித்துள்ளது.