டெல்லி பழைய கார்களை சொற்ப விலைக்கு தமிழகத்தில் வாங்க முடியுமா? என்ன நடைமுறை?

டெல்லி பழைய கார்களை சொற்ப விலைக்கு தமிழகத்தில் வாங்க முடியுமா? என்ன நடைமுறை?
டெல்லியில் இருந்து பழைய கார்களை வாங்கி வேறு மாநிலங்களில் விற்பனை செய்வது புதிய தொழிலாக உருவெடுத்துள்ளது

டெல்லியில், காற்று மாசு அளவைக் கட்டுப்படுத்தும் விதமாக 10 ஆண்டுகளுக்கும் மேலான டீசல் கார்களையும், 15 ஆண்டுகளுக்கும் மேலான பெட்ரோல் கார்களையும் பயன்படுத்த அந்த மாநில அரசு கடந்த ஜூலை 1 முதல் தடை விதித்தது.

டெல்லியில் தடை செய்யப்பட்டுள்ள வாகனங்களின் பட்டியலில் மொத்தம் 62 லட்சம் வாகனங்கள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டது.

ஆனால், மக்களிடையே எழுந்த கடும் எதிர்ப்பு காரணமாக, இந்த உத்தரவை விலக்கிக் கொள்வது குறித்துப் பரிசீலித்து வருவதாகவும் மக்களின் வாகனங்களைப் பறிமுதல் செய்ய மாட்டோம் எனவும் டெல்லியின் சுற்றுச்சூழல் அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிர்சா கூறியுள்ளார்

ஆனால், அதற்கு முன்பே டெல்லியில் தடை செய்யப்பட்ட பழைய கார்களை குறைந்த விலைக்கு வாங்கி, வெளிமாநிலங்களில் விற்பனை செய்வதற்கான விளம்பரங்கள் அதிகரித்தன.

டெல்லியில் இருந்து விலை மதிப்புள்ள கார்களை தமிழகத்தில் வாங்கி விற்பனை செய்யும் தொழிலும் சூடு பிடித்துள்ளது. இந்தத் தடை விலக்கப்பட்டாலும் அங்கிருந்து விலை மதிப்புள்ள பழைய கார்களை விற்கும் வர்த்தகம் குறையாது என்கின்றனர் பழைய கார் விற்பனையாளர்கள்.

இவ்வாறு வாங்கப்படும் கார்களை இங்கு மறுபதிவு செய்வது எப்படி, அதற்கு ஆகும் செலவு எவ்வளவு என்பதை விளக்கும் போக்குவரத்துத் துறை அலுவலர்கள், கார் விற்பனையாளர்கள் மற்றும் நுகர்வோர் அமைப்பினர், இந்த வாகனங்களை வாங்கும்போது முக்கியமாகக் கவனிக்க வேண்டியவற்றையும் சுட்டிக்காட்டுகின்றனர்.

டெல்லியில் விதிக்கப்பட்ட தடை உத்தரவு

காற்று தர மேலாண்மை ஆணையத்தின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து, கடந்த ஜூலை 1 முதல் இந்தத் தடை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனால், பழைய வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் விற்பனை நிலையங்களில் எரிபொருள் மறுக்கப்பட்டது. பல வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அண்டை மாநிலங்களில் இருந்தும் 10 ஆண்டுகளுக்கும் மேலான டீசல் வாகனங்களும், 15 ஆண்டுகளுக்கும் மேலான பெட்ரோல் வாகனங்களும் டெல்லிக்குள் வராமல் வெளியில் நிறுத்தப்பட்டன.

இதனால் சரக்குப் போக்குவரத்து, பொதுமக்கள் அன்றாட அலுவல்கள் எனப் பலவும் பாதிக்கப்பட்டன. இதனால் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதன் காரணமாக, இந்த உத்தரவை நிறுத்தி வைக்கப் போவதாகவும், மக்களின் வாகனங்களைப் பறிமுதல் செய்ய மாட்டோம் எனவும் கூறிய சுற்றுச்சூழல் அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிர்சா, இந்தத் தடை நடவடிக்கையை வாகனங்களின் வயது அடிப்படையில் செய்யாமல், மாசு வெளியீட்டை அதிகமாக மேற்கொள்ளும் வாகனங்கள் அடிப்படையில் செய்வது குறித்துப் பரிசீலிப்பதாகக் கூறியுள்ளார்.

ஆனால் காற்று தர மேலாண்மை ஆணையமும், தேசிய பசுமைத் தீர்ப்பாயமும் பழைய வாகனங்கள் தொடர்பாக அடுத்ததாக என்ன உத்தரவைப் பிறப்பிக்கும் என்பது குறித்து மக்களிடம் ஒரு குழப்பம் காணப்படுகிறது.

ஏனெனில் டெல்லியிலும் அதன் அண்டை மாநிலங்களில் உள்ள தேசிய தலைநகர மண்டலத்திற்கு உட்பட்ட மாவட்டங்களில் (NCR Districts) உள்ள பழைய வாகனங்களுக்கு (ELVs-End of Life Vehicles) கடந்த 2015ஆம் ஆண்டிலேயே தடை விதித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

அதனால், பழைய வாகனங்கள் டெல்லியில் தொடர் சிக்கல்களைச் சந்தித்து வருகின்றன. இந்தத் தடை விலக்கப்பட்டாலும் மீண்டும் தடை வருமா என்பது குறித்து உறுதியாகத் தெரியாத நிலையில், பழைய வாகனங்களை வைத்துள்ள மக்கள், அவற்றை விற்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

ஒரே நேரத்தில் பல லட்சம் வாகனங்களை விற்பதால், வாகனங்களை மிகக் குறைந்த விலைக்கு விற்கின்ற நிர்ப்பந்தமும் ஏற்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் மக்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

டெல்லியை சேர்ந்த உயர்ரக கார்கள் மீது தமிழக மக்கள் ஆர்வம்

இவ்வாறு டெல்லியில் இருந்து வெளியேற்றப்பட வேண்டிய வாகனங்களை, குறிப்பாக கார்களை வாங்கி வேறு மாநிலங்களில் விற்பனை செய்வது புதிய தொழிலாக உருவெடுத்துள்ளது.

டெல்லியை ஒட்டியுள்ள ஹரியாணா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இவற்றைப் பயன்படுத்தலாம் என்ற நிலையில், அங்குள்ள மக்கள் குறைந்த விலைகொண்ட கார்களை வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகமுள்ளன.

ஆனால் டெல்லியில் இருந்து தொலைதுாரத்தில் உள்ள தமிழகத்தில், டெல்லி பதிவெண் கொண்ட விலை மதிப்புள்ள உயர்ரக கார்களுக்கான புதிய சந்தை உருவாகியுள்ளதாக பழைய கார் விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.

ரூ.15 லட்சத்துக்கும் மேலான விலையுடைய, 8–9 இருக்கை கொண்ட பெரிய கார்கள் மற்றும் சொகுசுரக கார்களை டெல்லியில் இருந்து குறைந்த விலைக்கு வாங்கி விற்பதை, கோவையில் சிலர் புதிய தொழிலாகத் தொடங்கியுள்ளனர்.

பிரத்யேக அலுவலகம், கார் நிறுத்தும் இடம், பழைய வாகனங்களை வாங்கி விற்பதற்கான போக்குவரத்துத் துறையின் அங்கீகாரம் எதுவுமின்றி இவர்கள் செயல்படுவதாகவும் கூறப்படுகிறது.

பழைய கார் விற்பனைக்கான முறையான அங்கீகாரத்தைப் பெறுவதற்கு, மத்திய மோட்டார் வாகனச் சட்டத்தின் திருத்த விதிகள் 55C பிரிவின்படி, 'பரிவாகன்' சேவை போர்ட்டலில், இணைய சேவைகள் வழியாக Dealer Authorization for Old Registered Vehicle என்ற முகப்பில் பதிவு செய்து, 29 A படிவத்தைப் பூர்த்தி செய்து, கட்டணம் ரூ.25 ஆயிரம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அதைப் பரிசீலித்து, டீலருக்கான அங்கீகாரச் சான்றிதழை வழங்குவார்.

அது 29B என்ற படிவத்தில் மின்னணு முறையில் போர்ட்டலில் பதிவேற்றப்படும். அந்தச் சான்றைப் பெறும் டீலருக்கு, துறையினரால் 'யூசர் ஐடி, பாஸ்வேர்டு' வழங்கப்படும். அதைப் பயன்படுத்தி, அந்த போர்ட்டலில் தங்கள் நிறுவனத்தின் சார்பில் மேற்கொள்ளப்படும் வாகன விற்பனை விவரங்களைப் பதிவேற்றலாம். இது தற்போது கட்டாயமாக்கப்பட்டு வருகிறது.

ஆனால், இவை எதுவுமின்றி தனிநபர்கள் சிலர், வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் வாயிலாக அதிக விலை மதிப்புள்ள டெல்லி வாகனங்களை குறைந்த விலைக்கு வாங்கித் தருவதாக விளம்பரம் செய்து வருவது தெரிய வந்துள்ளது.

டெல்லி கார்கள் தற்போது அதிகளவில் விற்கப்படுவதை செயலிகளும் உறுதிப்படுத்துகின்றன. பழைய கார்களை விற்கவும் வாங்கவும் செயல்படும் செயலி ஒன்றில், 16,572 எண்ணிக்கையிலான டெல்லி கார்கள் விற்பனைக்கு வந்துள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்றொரு செயலியில் 11,773 கார்களும், வேறோரு செயலியில் 1,344 கார்களும் டெல்லியில் இருந்து விற்பனைக்கு இருப்பதாகக் கூறுகின்றன.

ஆனால் இந்தச் செயலிகளில் குறிப்பிட்டுள்ள தொகையைவிட குறைந்த விலைக்கு தனிநபர்கள் சிலர் வாங்கித் தருவது உண்மை என்கின்றனர் பழைய கார் விற்பனையாளர்கள்.

குறிப்பாக 15 ஆண்டுகளுக்கும் மேலான பழைய பிஎம்டபிள்யு, பென்ஸ், டொயோட்டா போன்ற விலை மதிப்புள்ள கார்களை மிகக் குறைந்த விலைக்கு டெல்லியில் இருந்து வாங்கி தமிழகத்தில் விற்கும் போக்கு சமீபமாக அதிகரித்துள்ளதாகக் கூறுகிறார், ஓய்வு பெற்ற வட்டாரப் போக்குவரத்து அலுவலரும், போக்குவரத்து விழிப்புணர்வு எழுத்தாளருமான பாஸ்கரன்.

கோவையில் இரு இடங்களில் கிளைகளைக் கொண்டுள்ள பழைய கார் விற்பனையகத்தின் தலைமை நிர்வாகி கோபி, ''டெல்லியில் இருந்து உயர்ரக கார்களை வாங்கி வந்து கோவையில் விற்பனை செய்வதை சிலர் முழுநேரத் தொழிலாகச் செய்து வருகின்றனர். அதிலும் இறக்குமதி கார்கள் குறைந்த விலைக்கு டெல்லியில் இருந்து கொண்டு வரப்படுகின்றன'' என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

கோவையில் டெல்லி கார்களை குறிப்பாக இன்னோவா போன்ற உயர்ரக கார்களை குறைந்த விலைக்கு வாங்கித் தருவதாகப் பலரும் யூடியூப் சேனல்களில் வீடியோ பதிவிட்டு வருகின்றனர். அவற்றில் டெல்லி பதிவெண் மற்றும் அதையொட்டியுள்ள பகுதிகளைச் (NCR Districts) சேர்ந்த பிற மாநில பதிவெண் கொண்ட கார்களை காண்பித்து, அவற்றின் விலையையும், சிறப்புகளையும் விவரிக்கின்றனர்.

அவர்களில் ஒரு விற்பனையாளரிடம் பிபிசி தமிழ் பேசியபோது, டெல்லியில் தற்போது தடை விலக்கப்பட்டாலும் அங்கிருந்து உயர்ரக கார்கள் ஏராளமாக இங்கு வருவதாகவும் குறைந்த விலைக்குக் கிடைக்குமென்றும் தெரிவித்தார். அதேபோன்று டெல்லியில் உள்ள ஒரு பழைய கார் விற்பனையாளரிடம் அக்னிசிறகு செய்தியாளர் பேசியபோது, 80 ஆயிரம் கி.மீ. மட்டுமே ஓடியுள்ள இன்னோவா கார், 7 லட்ச ரூபாய்க்கு இருப்பதாகத் தகவல் கூறினார்.