இறந்து விட்டதாக இறுதி சடங்கு செய்யப்பட்ட ரவுடி மாடு தினேஷ் துப்பாக்கி முனையில் கைது

சென்னை:இறந்து விட்டதாக கூறி, இறுதி சடங்கு முடித்து, தமிழகம், ஆந்திரா மற்றும் கர்நாடகா போலீசாரை ஏமாற்றிய, சென்னையை சேர்ந்த ரவுடி மாடு தினேஷ், நேற்று காட்பாடியில் துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டார்.
இதுபற்றி, அதிதீவிர குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் கூறியதாவது:
சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்தவர் மாடு தினேஷ், 39; ரவுடி. இவர் மீது, தமிழகம், கர்நாடகா, ஆந்திராவில், 43க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன; 2010ல், 'ஏ பிரிவு' ரவுடி பட்டியலில் சேர்க்கப்பட்டார். அந்த ஆண்டில் இவர் இறந்து விட்டதாகக் கூறி, அவரது தந்தை ரமேஷ் மற்றும் குடும்பத்தினர் இறுதி சடங்கு செய்தனர்.
தினேஷ் இறக்காத நிலையில், போலீசாரை ஏமாற்ற இப்படியொரு நாடகத்தை அரங்கேற்றி உள்ளனர். இதை போலீசாரும் நம்பி விட்டனர்.
இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திய மாடு தினேஷ், தன் மனைவி மற்றும் மகளை, திருச்சி மாவட்டம் லால்குடியில் தங்க வைத்து விட்டு, செம்மரக்கட்டை கடத்தலில் ஈடுபட்டார். கடத்தல் தொழிலுக்காக, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கார்களை திருடி உள்ளார்.