ராமநாதபுரத்தில் இருந்து 'அண்ணா விருது' பெறும் ஒரே தலைமை ஆசிரியர்... உலையூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் நெகிழ்ச்சி!

ராமநாதபுரம் மாவட்டம் உலையூர் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் அம்பேத்கர் கடந்த ஆண்டு நல்லாசிரியர் விருது வென்ற நிலையில், இந்த ஆண்டு அவருக்கு ‘அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது’ வழங்கப்பட இருக்கிறது.
ச. மார்ட்டின் ஜெயராஜ்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து மேற்கே சுமார் 27 கி.மீ தொலைவில் உலையூர் அரசு உயர்நிலைப் பள்ளி அமைத்துள்ளது. இப்பள்ளியில் மொத்தமாக 258 மாணவர்கள் பயில்கிறார்கள். இதில் 149 பேர் மாணவர்கள், 109 பேர் மாணவிகள். எளிய பின்னணியை கொண்ட இந்த மாணவர்களை சாதனையாளர்களாக மாற்றுவதில் பெரும் பங்கு ஆற்றி இருக்கிறார் தலைமை ஆசிரியர் அம்பேத்கர். அவரது தலைமைத்துவ பண்பை பாராட்டும் விதமாக தமிழக அரசு அவருக்கு அறிஞர் அண்ணா விருதை வழங்கி கவுரவிக்க இருக்கிறது.
தலைமை ஆசிரியர் அம்பேத்கர் கடந்த ஆண்டு நல்லாசிரியர் விருது வென்ற நிலையில், இந்த ஆண்டு அவருக்கு ‘அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது’ வழங்கப்பட இருக்கிறது. இந்நிலையில், அறிஞர் அண்ணா விருது பற்றியும், அந்த விருதினை ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து பெறும் ஒரே தலைமை ஆசிரியரான அம்பேத்கர் குறித்தும் கேட்டறிய, நாம் உலையூர் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு நேரில் விசிட் அடித்தோம்.
இடைவேளையின் போது அங்கு பணியாற்றும் ஆசிரியர்களை சந்தித்துப் பேசினோம். அப்போது ‘அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது’ குறித்து பட்டதாரி கணித ஆசிரியர் செல்வம் பேசுகையில், "ஒரு பள்ளியின் வளர்ச்சி தொடர்பாக தலைமை ஆசிரியர் என்னென்ன பணிகள் மற்றும் திட்டங்களை கொண்டு வந்து பள்ளியை உயர்த்தி இருக்கிறார் என்பதை ஆராய்ந்து இந்த விருது வழங்கப்படுகிறது. இந்த விருது வழங்கப்படுவதில் பல உட்கூறுகள் இருக்கிறது. அதாவது, அந்தப் பள்ளி சமூகத்துடன் எந்த அளவுக்கு தொடர்பில் இருக்கிறது, பள்ளியின் தலைமை ஆசிரியர் சமூகத்தில் இருக்கும் நபர்களுடன் எந்த அளவுக்கு இணக்கமாக செயல்பட்டு, பலவேறு பணிகளை செய்துள்ளார் என்பதை ஆராய்வார்கள்.
குறிப்பாக, பள்ளியின் தேர்ச்சி விகிதத்தை ஆராய்ந்து பார்ப்பார்கள். எத்தனை ஆண்டுகளாக பள்ளி நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது, தேர்ச்சி பெற்ற மாணவர்களில் எத்தனை பேர் அதிக மதிப்பெண்கள் பெற்று இருக்கிறார்கள் என்பதையும் கவனிப்பார்கள். இதேபோல், ஆசிரியர்கள், அலுவலர்கள் உள்ளிட்ட அனைவரையும் ஒருங்கிணைத்து செயல்படுத்துவது போன்ற தலைமைத்துவ பண்புகளுக்காகவும் இந்த விருது வழங்கப்படுகிறது." என்று கூறினார்.
தலைமை ஆசிரியர் அம்பேத்கர் குறித்து பட்டதாரி தமிழ் ஆசிரியர் காளீஸ்வரன் பேசுகையில், "எங்கள் ஆசிரியர் காலை 8 மணிக்கெல்லாம் பள்ளி விடுவார். மாலை 6 மணிக்கு மேல் தான் வீட்டுக்கே செல்வார். தனக்கென்று எதையும் வைத்துக் கொள்ள மாட்டார். தனது முழு நேரத்தையும் மாணவர்களுக்காக செலவிடுவார். கோடை விடுமுறை நாட்களில் கூட பள்ளியில் இருப்பார். வகுப்பறை கரும்பலகையில் வண்ணம் தீட்டுவது, உடைந்த மேசை, ஜன்னல், கதவுகளை சரிசெய்வது, கழிப்பறை வசதிகளை சரிசெய்வது, குடிநீர் வசதிக்கான குழாய்களை அமைப்பது உள்ளிட்ட பணிகளை இந்த விடுமுறை நாட்களில் உடனிருந்து கவனித்துக் கொள்வார்.